இவங்க அண்ணன் தம்பிகளா? இளையராஜாவை அதிர வைத்த ஜிவி, மணிரத்தினம்!

பிரபல வார இதழ் ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்துள்ள இளையராஜாவிடம் வாசகர் ஒருவர் நீங்கள் அசடு வழிந்த சம்பவங்கள் ஏதாவது உண்டா என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள இளையராஜா, சினிமாவில் இரண்டு பெரிய புள்ளிகள். இருவருமே பிரபலமானவர்கள். அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது பெரிய இயக்குநராக உள்ள அவர் முதல்முதலில் கன்னடப் படம் இயக்கினார். அதற்கு நான்தான் இசைஅமைத்தேன். பின்னர் பெரிய நிறுவனம் எடுத்த சிறிய படத்தில் அந்த புதுப்பையனுக்கு வாய்ப்பு தர உள்ளதாக தயாரிப்பாளர் கூறினார். கதையை கேட்டு விட்டு சரி என்று கூறிவிட்டேன்.
அதன்பின்னர் ஒரு படத்தின் பூஜைக்காக ஒரு பெரிய பைனான்சியர் வந்திருந்தார். அவரிடம் அந்த புதிய இயக்குநரின் பெயரைச் சொல்லி வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி சிபாரிசு செய்தேன். அதற்கு அவர், நீங்கள் வேண்டுமானால் என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரே தவிர அவன் என் தம்பிதானே? என்று என்னிடம் கூறவே இல்லை.
அதேபோல் அந்த இயக்குநரிடம், பைனான்சியரின் பெயரைச் சொல்லி அவரைப்போய் பார்க்கச் சொன்னேன். அப்போது அந்த இயக்குநர், சார், அவர் என்னோட அண்ணன்தானே? என்று என்னிடம் சொல்லவேயில்லை.
சில நாட்கள் கழித்து இது பற்றி வேறொருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பிதானே உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அப்போது என் முகத்தில் அசடு வழிந்தது என்று கூறியுள்ளார் இளையராஜா.
எப்படி இவர்களால் அண்ணன் தம்பிகள் என்பதைக்கூட மறைத்து உலவி வர முடிகிறது?. அதை நினைக்கும் போதெல்லாம் என் மனம் உறைந்து போய்விடும் என்று கூறியுள்ளார் ராஜா.
ராஜா சொல்லியுள்ளஅந்த அண்ணன் தம்பி மறைந்த ஜிவி மற்றும் மணிரத்தினம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


Click it and Unblock the Notifications











