கொரோனா போராளிகளுக்காக இளையராஜாவின் இசையில்.. எஸ்பிபி குரலில் அசத்தல் பாடல்!
சென்னை: கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடும் போராளிகளுக்காக பாடல் ஒன்றை சமர்ப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
உலக நாடுகளை எல்லாம் மிரட்டி உருட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காகவும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என பலரும் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் விழிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் இருந்தால் மட்டுமே இந்த கொள்ளை நோயில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு பாடலாக இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்களின் மெட்டிலேயே பல பாடல்கள் வெளி வந்துள்ளன.

அண்மையில் கூட வைரமுத்து வரிகளில் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் மெட்டில் பாடியிருந்தார். அந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா கொரோனாவை எதிர்த்து போராடும் போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.
அந்தப் பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பாரத பூமி.. ஒரு புண்ணிய பூமி.. என்று தொடங்கும் இந்த மெலோடி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு வாசித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











