அனுமதி அளித்த நீதிமன்றம்.. இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருவது திடீர் ரத்து!
சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று வருவதாக இருந்த இளையராஜாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ளது பிரபலமான பிரசாத் ஸ்டூடியோ. இங்குள்ள ஒரு பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவை நடத்தி வந்தார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த இடத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.

பிரசாத் ஸ்டூடியோ
இந் நிலையில் அந்த பகுதியை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து ஸ்டூடியோ நிர்வாகத்துடன் இளையராஜாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தார்.

இளையராஜா வழக்கு
பின்னர், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருக்கும் பொருட்களையும், இசைக் குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தியது. அதற்கு இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்பட்டது.

எப்போது அனுமதிப்பது
பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜாவை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்றும் எப்போது அனுமதிப்பது என்பது குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் முடிவு செய்துகொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

வருகை ரத்து
அதன்படி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு இன்று வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்டூடியோ வாசலில் மீடியா குழுமியிருந்தது. ஆனால், அவர் வரவில்லை. இது தொடர்பாக அவருடைய செய்தி தொடர்பாளர், இளையராஜா வருவது ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











