Ilayaraja: மரண பயத்தில் இருந்த இளையராஜா.. அம்மா, மனைவி குழந்தைகளை நினைத்துக் கொண்டு.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் இசையின், இந்திய இசையின் அடையாளமாக இசைஞானி இளையராஜா திகழ்கிறார். இசையில் இவர் செய்தவை எல்லாம் புரட்சியாக உள்ளது என பல ஜாம்பவான்கள் பட்டியலிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இளையராஜாவே புரட்சிதான் என இசையமைப்பாளர் தென்மா குறிப்பிட்டுள்ளார். இப்படியான இளையராஜா தனது திரைப்பயணத்தை இசையமைப்பாளராக தொடங்குவதற்கு முன்னர், மரண பயத்தை எதிர்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரே தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம், 8ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இவரது சிம்பொனி இசையை உலகம் முழுவதும் உள்ள பலரும் பல நாடுகளில் இருந்து, புறப்பட்டுச் சென்று நேரில் கேட்டனர். இவரது சிம்பொனியால், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்தது. இளையராஜாவுக்கு வரும் ஜூன் 2ஆம் தேதி, அதாவது அவரது பிறந்த நாளில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் தன்ராஜ் மாஸ்டரிடம் மாணவராக இருந்தவர். இவர் கடந்த 1976ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை சுமார் 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். மேலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசைஞானிக்கு வரும் ஜூன் மாதத்தில் 82 வயது ஆகவுள்ளது. திரைத்துறையில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளார்.

இளையராஜா: இசைஞானி இளையராஜா, சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது இளமைக்காலம் குறித்தும், தான் தனது சொந்த ஊரை விட்டு, சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது தான் என்ன என்ன சவால்களை எதிர்கொண்டேன் என பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் மிகவும் முக்கியமான விஷயமாக அவர் ஒரு முறை தான் இறந்து விடுவேன் என அச்சப்பட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
காய்ச்சல்: அதாவது, " இளையராஜா அப்போது தன்ராஜ் மாஸ்டரிடம், மாணவராக இருந்துள்ளார். அப்போது அவர் மைசூரில் கச்சேரிக்காக வந்துள்ளார். மைசூரில் அவர்கள் தங்கியிருந்த அறையில் அவரும் அவரது நண்பரும் இருந்துள்ளார்கள். கச்சேரி முடிந்த பின்னர், இளையராஜாவுக்கு மிகவும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அறையிலேயே தங்கியுள்ளார். இதனால் அறையை வெளியே பூட்டிவிட்டு, அவரது நண்பர் வெளியே சென்றுள்ளார். இது இளையராஜாவுக்கு தெரியாது. இப்படி இருக்கும்போது, இளையராஜாவுக்கு காய்ச்சல் மிகவும் அதிகமாகியுள்ளது.

மரண பயம்: அந்த நேரத்தில், அவரால் அறையை விட்டு வெளியே போக முடியவில்லை. அறையில் போன் இல்லாததால், ஹோட்டல் நிர்வாகத்தையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரம் ஆக ஆக, காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே இருந்துள்ளது. அது வரை இந்த அளவிற்கு காய்ச்சல் இளையராஜாவுக்கு வந்ததில்லை என்பதால், அவ்வளவு தான், நாம் உயிரோடு இருக்க மாட்டோம். இதுதான் நமது கடைசி நாள். உயிர் பிழைக்க வழியே இல்லை என நினைத்து, தனது அம்மா, மனைவி, குழந்தைகளை நினைத்து அழுதுள்ளார். உங்களை எல்லாம் விட்டுட்டு போகிறேனே என அழுதுள்ளார். அதன் பின்னர், வெளியே போன இளையராஜாவின் நண்பர், வந்து கதவைத் திறந்து இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மூகாம்பிகை: இது மட்டும் இல்லாமல், தாங்கள் அனைவரும் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் செல்லவுள்ளதாகவும், நீ வருகிறாயா ராஜா எனக் கேட்டுள்ளார். இளையராஜா கொஞ்சம் யோசித்துவிட்டு, நாம் சாவதாக இருந்தால், மூகாம்பிகை அம்மன் கோவிலுக்குச் சென்று சாகலாம் என முடிவெடுத்து கோயிலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். கோவிலுக்கு வருவதாக இளையராஜா சொன்ன பின்னர், அடுத்த 5 நிமிடத்தில் இளையராஜாவின் காய்ச்சல் முழுவதும் குறைந்துள்ளது" என அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இளையராஜா கடந்த ஆண்டு மட்டும் மூன்று படங்களுக்கு இசையமைத்தார். ஜமா, தினசரி மற்றும் விடுதலை பாகம் 2, ஆகிய படங்கள்தான் அவை. இதில் தினசரி படத்தைத் தவிர மீதம் உள்ள இரண்டு படங்களான, ஜமா மற்றும் விடுதலை பாகம் 2 படங்கள் இசைக்காகவும் கொண்டாடப்பட்டது. ஜமா படத்தின் கதைக்களமும், விடுதலை பாகம் 2 படத்தின் கதைக்களமும் வேறு வேறு என்றாலும், இரண்டிற்கும் அட்டகாசமாக பின்னணி இசை அமைத்து அசத்தியுள்ளார்.
தான் ஒவ்வொரு செயலைத் தொடங்கும்போதும் மூகாம்பிகை அம்மனை வழிபட்டுவிட்டுத்தான் செய்யத் தொடங்குவேன் என்று கூறிய இளையராஜா, மற்றொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார். அதாவது, இளையராஜா தான் எங்கு இசைக்கச்சேரி நடத்தினாலும் அங்கு அவர் முதலில் பாடும் பாடல் என்றால் அது, ’ஜனனி ஜனனி’ பாடல்தான். அந்தப் பாடலை முதலில் யேசுதாஸ்தான் பாட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் இல்லாததால், அவருக்கு பதிலாக, இளையராஜாவே பாடியுள்ளார். அந்த பாடலை இளையராஜா பாடியபோது அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியில் அழுததையும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, சிம்பொனி இசையமைக்க லண்டனுக்கு செல்வதாக வீடியோ வெளியிட்டு அறிவித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த பின்னர், இசைஞானி இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
தமிழ்நாட்டிற்கு வந்த பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி கூறினார். அதேபோல் டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து சிம்பொனி அரங்கேற்றம் தொடர்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. தற்போது இளையராஜாவை தமிழ்நாட்டு மீடியாக்கள் தொடங்கி, இந்திய அளவிலான மீடியாக்கள் அடுத்தடுத்து பேட்டி எடுத்து வருகின்றன.
இசைஞானி குறித்து, அவரது ரசிகர்கள் சிலாகித்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அவையும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் பேட்டிகளில் இளையராஜா பகிர்ந்து கொள்ளும் பல விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. அதாவது தனது சிறுவயதில், புல்லாங்குழல் செய்ததைக் கூறினார். அதாவது, மூங்கிலை எடுத்துக்கொண்டு, பெண்கள் தலைமுடிச் சிக்கலை பிரிக்க பயன்படுத்தும் கம்பியை தீயில் வாட்டி, மூங்கிலில் துளைகளை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இவரது இந்த அனுபவம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











