அவர் பாடுனாத்தான் இளையராஜா.. பேசினா எச் ராஜா.. ராஜகம்பீரன் விளாசல்!
சென்னை: திரைப்படப் பாடலுக்கு இசை மட்டுமல்ல, பாடல் வரியும் முக்கியம் என கவிஞர் வைரமுத்து பேசிய நிலையில், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை என்று கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகர் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்
சென்னையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து அந்த விழாவில் பேசி இருந்தார்.

மிரட்டிய கங்கை அமரன்: இதுகுறித்து பேசிய இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். அதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும், இதற்கு மேலும் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அவர் பேச மாட்டார் அவருடைய தம்பியாகிய நான் பேசுவேன் என்றும் அந்த வீடியோவில் வைரமுத்துவை எச்சரித்திருந்தார்.
ஈகோ தான் காரணம்: இந்த விவகாரம் குறித்து சினிமா விமர்சகரான ராஜகம்பீரன் எமது பிலிமிபீட் சேனலுக்கு அளித்த பேட்டியில், இரண்டு பேருக்கும் இடையில் சண்டை இருந்தாலும், நல்லது, கெட்டதில் சந்திக்கும் போது பேசுவார்கள். இவர்கள் இருவருக்குள் ஏதாவது சொத்து தகராறு இருக்கிறதா. அப்படி எதுவும் இல்லையே. வைரமுத்து தன்னைத்தாண்டி வளர்ந்ததை இளையராஜாவால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை இதைத்தான் ஈகோ என்று சொல்லுவார்கள்.
பேசினால் எச் ராஜா: வைரமுத்து சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துவிட்டார். ஆறு தேசிய விருதுகளை வாங்கிவிட்டார், பல சாதனைகள் படைத்துவிட்டார். இதற்கு மேல் வைரமுத்திற்கு எந்த அங்கீகாரமும் தேவை இல்லை அதற்காக அவர் ஏங்கவும் இல்லை. இசை அமைக்கும் போது இருக்கும் இளையராஜா வேறு, ஆனால், சக மனிதர்களிடம் எப்படி பழகுகிறீர்கள், எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர் பாடுனாத்தான் இளையராஜா... பேசினால் எச் ராஜா என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.
எப்படி ரசிக்க முடியும்: தன்னுடைய காலில் விழுந்து கிடப்பவர்களை மட்டுமே, ஆசிர்வதிக்கும் மஹா பெரியவரைப் போல நடந்து கொள்ளும் இளையராஜாவின் அணுகுமுறை சரியானதா. எந்த பாடல் ஆசிரியரையாவது இதுவரை பாராட்டி இருக்கிறாரா. தன்னையே வியந்து பார்த்துக்கொள்வது, ஒரு சிறுமையான குணம். மக்கள் உங்களை பாராட்டட்டும், தன்னைத்தானே புகழ்வது கொள்வது சரியானது அல்ல, இளையராஜா ஒரு மகத்தான கலைஞர் அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், பாடல் வரிகளே இல்லாத பாடலை எவ்வளவு நேரம் ரசிக்க முடியும், பாடலுக்கு மொழியும் அவசியம் என்று ராஜகம்பீரன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











