இளையராஜாவுக்கே இந்த நிலைமையா?.. கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட இசைஞானி.. என்ன நடந்தது?
சென்னை: இசைஞானி இளையராஜா இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் அந்தப் படத்துக்கும் படத்தின் இசைக்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. இந்தச் சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலக தமிழர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவரது பாடல்களுக்கு இந்தக் கால தலைமுறையினரும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது இசையமைப்பில் கடைசியாக ஜமா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. டிசம்பர் 20ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸாகிறது. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக இருக்கிறது.

இசைக்கும் ஆவல்: விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இளையராஜாவின் இசை பெரிதாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் என்கவுண்ட்டர் சீனுக்கு இளையராஜா அமைத்த இசையை ஒருதரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதன் காரணமாக இரண்டாவது பாகத்தில் மிகவும் கவனத்துடன் அவர் பின்னணி இசையை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் முதல் பாகத்தில் சந்தித்த விமர்சனத்துக்கு ராஜா பதிலடி கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள்.
சிம்பொனி: இதற்கிடையே இளையராஜா சிம்பொனி இசையையும் அமைத்திருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்த வயதிலும் இளையராஜா சிம்பொனி இசையமைத்து கலக்குகிறாரே என்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவரைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் செய்துகொண்டே இருங்கள்; அவர் தனது இசை பயணத்தில் தீவிரமாக இருக்கிறார் எனவும் கூறுகின்றனர்.
என்ன விமர்சனம்?: இளையராஜா மீது எப்போதும் ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அவர் எல்லோரிடமும் தலைக்கனத்தோடு நடந்துகொள்கிறார்; தன்னிடம் பாடும் பாடகர்களை மேடையில் வைத்து அசிங்கப்படுத்துகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அதெல்லாம் அவருக்கு தலைக்கனம் இல்லை அது கர்வம்; அவர் எவ்வளவோ அவமானங்களை சந்தித்திருக்கிறார். அப்படி அவர் இருக்கையில் அவர் இவ்வளவு கர்வத்தோடு இருப்பதில் என்ன தவறு என்றும் இசைஞானியின் ரசிகர்கள் கேட்பதுண்டு.
வெளியேற்றப்பட்ட இளையராஜா: இந்நிலையில் பெரும் அதிர்ச்சி தரும் விஷயம் நடந்திருக்கிறது. அதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது கருவறைக்கு முன்பு இருக்கும் அர்த்த மண்டபத்துக்கு செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த அந்தணர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மண்டபத்துக்கு வெளியே நிற்க வைத்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதுதொடர்பான வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள்; இசைஞானி இளையராஜாவுக்கே இந்த நிலைமையா என்று கேள்வி கேட்டு தங்களது கோபத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











