பண்ணைப்புரத்தில் நவீன பள்ளிக்கூடம் கட்டுகிறார் இளையராஜா!

பண்ணைப்புரத்தில் பிறந்து, பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நான்கு சகோதரர்களில் ஒருவர்தான் ராசய்யா எனும் இளையராஜா.
உலகப் புகழ்பெற்ற இசைமேதையாக இன்று அவர் திகழ்ந்தாலும், அந்த ஞானத்துக்கெல்லாம் வேர் தன் சொந்த மண்தான் என்பது ராஜாவின் நம்பிக்கை. தன் தாய் இறந்த பிறகும் கூட தொடர்ந்து தன் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து போவது ராஜாவின் வழக்கம்.
தான் பிறந்த மண்ணுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில், எந்த ஆர்ப்பாட்டமோ அறிவிப்போ இல்லாமல் ஒரு வேலை செய்திருக்கிறார் ராஜா.
அது பண்ணைப் புர குழந்தைகளுக்காக அனைத்து வசதிகளும் நிறைந்த நவீன பள்ளிக்கூடத்துக்கான அடிக்கல்நாட்டு விழா. பண்ணைப்புரத்தில் தனக்கு சொந்தமான பெரிய நிலப்பரப்பில் இந்தப் பள்ளியை உருவாக்குகிறார் இளையராஜா.
இந்தப் பள்ளி மத்திய கல்வி முறையான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இயங்கக் கூடியது. ஆனால் புத்தகக் கல்வி மட்டுமி்ல்லாமல், விளையாட்டு, யோகா, ஆன்மீகம், முக்கியமாக இசை போன்றவையும் கற்றுத் தரப்படும்.
இந்த பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் பண்ணைப்புரத்தில் நடந்தது. இதில் இளையராஜா, அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, மகள் பவதாரிணி மற்றும் உறவினர்கள் பலரும் பங்கேற்றனர். ஊரில் இளையராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்து அடிக்கல் நாட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











