இளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்.. சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்சினை தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இட உரிமை தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்தார்.
பிரசாத் ஸ்டுடியோ'வில் 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்து பதிவு செய்துள்ளதாக இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











