கேபிள் டிவியில் ஜன நாயகன் ஓட்டிய திருட்டு ஆப்ரேட்டர் கைது.. கோபத்தில் எகிறிய விஜய் ரசிகர்கள்!
கோவை: நடிகர் விஜய் நடித்து உருவாகி உள்ள படம் ஜன நாயகன். இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. முழு படமும் ஹெச்.டி தரத்தில் லீக் ஆனது. இது மொத்த படக்குழுவினர் மற்றும் திரையுலகத்தினருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முதற்கட்டமான சைபர் கிரைம் காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல், சுமார் 500 சமூக வலைதளக் கணக்குகளை இந்த விவகாரத்தில் முடக்கி உள்ளனர். இப்படி இருக்கையில் சட்டவிரோதமாக லீக் ஆன ஜன நாயகன் படத்தை கோவை கருமத்தப்பட்டியைச் சேர்ந்த கேபிள் ஆப்ரேட்டர், நான் படத்தை பார்த்துட்டேன், நம்ம சப்ஸ்கிரைபர்களும் பார்க்கட்டுமே என்று, ராசி பிரைம் மூவி என்ற லோக்கல் சேனலில் படத்தை சுமார் இரண்டு மணி நேரம் ஓடவிட்டுள்ளார்.
ஆப்ரேட்டரின் இந்த அசாத்திய தைரியத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், காவல் துறையில் புகார் அளித்தனர். தொடக்கத்தில் கருமத்தப்பட்டி காவல்துறையினர் புகார் எடுப்பதாக கூறிவிட்டு, பின்னர் மறுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்படி இருக்கையில் தனி புகார் தேவையில்லை என்று கூறியதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உள்ளூரில் கேபிள் டிவியில் ஒளிப்பரப்பியது தொடர்பாக புகார் எடுத்துக் கொள்ளச் சொல்லி தவெகவினர் வற்புறுத்தியதன் பெயரில், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆர்வக்கோளாறு கேபிள் ஆப்ரேட்டரை கைது செய்துள்ளது.

சட்டப்படி ரிலீஸ் ஆகாத படத்தை கேபிள் சேனலில் ஒளிப்பரப்புவது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று தெரியாத நபருக்கு எப்படி கேபிள் டிவி உரிமம் வழங்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











