Kalyani priyadarshan: சூட்டிங்கில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு விபத்து.. புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதிக்கு பிறந்த கல்யாணி பிரியதர்ஷன், தற்போது பிசியான நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது 2 மலையாளப் படங்களில் நடித்துவரும் கல்யாணி பிரியதர்ஷன், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

சூட்டிங்கில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு விபத்து: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழில் வெளியான மாநாடு படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. சிம்புவுடன் கல்யாணி ஜோடி சேர்ந்திருந்த இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்தப் படமே தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.
ஆனால் தமிழில் முன்னதாக சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்து தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் கல்யாணி பிரியதர்ஷன். மேலும் புத்தம் புது காலை என்ற வெப் தொடரிலும் இவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். பிரபல முன்னணி மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில்தான் தன்னுடைய முதல் என்ட்ரியை கொடுத்திருந்தார்.
கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஹ்ருதயம் படம் மிகப்பெரிய வெற்றிய கொடுத்தது. தற்போது மலையாளத்தில் அடுத்தடுத்த இரு படங்களில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன். இதில் ஜோஷி இயக்கத்தில் ஆண்டனி படமும் ஒன்று. இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் துவங்கிய ஆண்டனி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்திற்காக கல்யாணி மேற்கொண்ட ஆக்ஷன் காட்சி ஒன்றில் ஏற்பட்ட விபத்தில்தான் அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்சியில் அவர் டூப் போடாமல் தானே நடித்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் சண்டைக் காட்சிகள் உடல் பலகீனமானவர்களுக்கு அல்ல என்றும் அவர் கேப்ஷனில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்தப் புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழில் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்ற போதிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். விரைவில் அவர் தமிழ் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











