முடிவுக்கு வருகிறதா சன் டிவியின் அழகு சீரியல்? தனது கேரக்டர் முடிந்ததாக முக்கிய நடிகர் தகவல்!
சென்னை: அழகு சீரியலில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் தனது கேரக்டர் முடிவுக்கு வந்ததாக தெரிவித்திருப்பதால் அந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சன் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அழகு. தொடக்கத்தில் மாலை 7 மணிக்கு ஒளிப்பரப்பான இந்த சீரியல் கடந்த சில மாதங்களாய் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் நடிகை ரேவதி அழகம்மை என்ற கதாபாத்திரத்திலும், தலைவாசல் விஜய் பழனிசாமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

இயக்குநர்கள்
இவர்களுடன் காயத்ரி ஜெயராம், ஸ்ருதி ராஜ், விஜே சங்கீதா, மணிகண்டன் ராஜேஷ், லோகேஷ் பாஸ்கரன், அவினாஷ் அசோக், பூவிலங்கு மோகன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் ரவி ஆரம்பத்தில் இந்த சீரியலை இயக்கினார்.

பூரணா கதாப்பாத்திரம்
அடுத்து ஓ.என்.ரத்னம், சுந்தரேஸ்வரன் உள்ளிட்ட இயக்குநர்களும் இந்த சீரியலை இயக்கினர். 700 எபிசோடுகளுக்கு மேல் கடந்திருக்கும் இத்தொடரை தற்போது ராமச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சுவாரசியமாக சென்ற இந்த சீரியலில் பூரணா கதாப்பாத்திரத்தை வில்லியாக காட்டினர்.

மல்லிகா கதாப்பாத்திரம்
இதனால் பூரணா என்றாலே இல்லத்தரசிகள் கடுப்பாயினர். இந்நிலையில் கடைசியாக ஒளிபரப்பான சில எபிசோடுகளில் மல்லிகா என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அவரை பார்த்தாலே பிபி எகிறும் நிலைக்கு கொண்டு சென்றனர்.

பழைய எபிசோடுகள்
அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் இந்த சீரியல் சென்ற நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் கைவசம் இருந்த சில எபிசோடுகளை சில நாட்கள் ஜவ்வு போல் இழுத்த ஒப்பேத்தினர். ஆனால் அதுவும் தீர்ந்து போக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பழைய எபிசோடுகளை போட்டு சரிக்கட்டி வருகின்றனர்.

நேற்று முதல் மீண்டும்
கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து புதிய எபிசோட்கள் படமாக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஜூலை 5 ஆம் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் நேற்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

திருநா பயணம் முடிகிறது
இந்நிலையில் அழகு சீரியலில் அழகம்மையின் கடைசி மகனாக திருநா என்ற கேரக்டரில் நடிக்கும் அவினஷ் அஷோக் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கும் பதிவு பல கேள்விகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் பதிவிட்டிருப்பதாவது, திருநாவாக என பயணம் இங்கே முடிகிறது.

அனைவருக்கும் நன்றி
எனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் நான் மிஸ் பண்ணுகிறேன், மேலும் பல விஷயங்களை என்னை கற்றுக்கொள்ள செய்த அனைவருக்கும் நன்றி, இது எனது முதலாவது சீரியலாகவும், நடிப்பிற்கான எனது முதல் படியாகவும் இருந்ததால், உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். அப்பா (தலைவாசல் விஜய்) அம்மா (ரேவதி மாம்) ஆகியோருக்கு ஒரு பெரிய நன்றி.

வருந்துகிறேன்..
என்னை ஊக்கப்படுத்தியதற்காகவும், இன்று நான் இப்படி இருக்க என்னை மோல்டு பண்ணிய அனைவருக்கும் நன்றி. நான் உங்களில் யாரையும் எரிச்சல் படுத்தியிருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், நாம் அனைவரும் விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன்.. என் குடும்பத்தை நான் மிஸ் பண்ணுவேன்.. அவினாஷ் - திருநா- அவினாஷ் பயணம் முடிவடைகிறது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

முடியப்போகிறதா?
அவரது இந்த பதிவை பார்த்த பலரும் ஏன் அழகு சீரியல் முடியப் போகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். திருநாவின் கேரக்டர் முடிவடைவதாக அவர் குறிப்பிட்டிருப்பதால் சீரியலில் அவரது கேரக்டர் முடிகிறதா, அல்லது வேறு ஏதேனும் கமிட்மென்ட்டால் அவர் விலகுகிறாரா என்றும் ரசிகர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











