Perarasu - சினிமாவில் சாதி எடுபடவில்லை.. ஆக்ரோஷமான பேரரசு - யாரை சொல்கிறார்?
சென்னை: Perarasu (பேரரசு) சினிமாவில் திறமைதான் முக்கியமே தவிர சாதி எடுபடவில்லை என இயக்குநர் பேரரசு பேசியிருக்கிறார்.
விஜய்யை வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பேரரசு. முதல் படமே மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து இரண்டாவது படமான சிவகாசி படத்திலும் விஜய்யே ஹீரோவாக நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முதல் இரண்டு படங்கள் அதுவும் விஜய் போன்ற பெரிய ஸ்டாரை வைத்து ஹிட் கொடுத்ததால் கோலிவுட்டின் கவனம் பெற்ற இயக்குநராக மாறினார் பேரரசு.

திருப்பதி: திருப்பாச்சி, சிவகாசியை அடுத்து அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படத்தில் பேரரசுவின் ஃபார்முலா ஓரளவு மட்டுமே கைகொடுத்ததால் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி படங்களை தவிர்த்து அவர் இயக்கிய எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. காலம் செல்ல செல்ல பேரரசுவின் கமர்ஷியல் ஆட்சி முடிவுக்கு வந்தது.
பேரரசு பேச்சு: இந்தச் சூழலில் பட விழா ஒன்றில் பேசிய பேரரசு, தமிழ் சினிமாவில் இரண்டே சாதிகள்தான் இருக்கின்றன. ஒன்று ஜெயித்த சாதி, மற்றொன்று ஜெயிக்காத சாதி. அதை தவிர வேறு சாதி சினிமாவில் இல்லை. எனவே சாதியை சார்ந்து படமெடுக்கும் இயக்குநர்கள் சற்று கவனமாக படம் எடுக்க வேண்டும். சாதியை வைத்து படம் எடுத்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி எடுங்கள். மற்றவர்களுக்கு வலிக்கும்படி எடுக்காதீர்கள். சினிமாவில் திறமைதான் முக்கியமே தவிர இங்கு ஜாதி எடுபடவில்லை" என்றார்.
யாரை சொல்கிறார்: பேரரசுவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பேசும் படங்களின் வரத்து அதிகரித்திருக்கிறது. இத்தனை வருட தமிழ் சினிமாவில் ஆண்ட சாதிகள் என கூறப்படும் குறிப்பிட்ட சாதிகளை வைத்து படம் வந்த சூழலில் இப்போது ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியில் கேட்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பா.இரஞ்சித், மாரி செல்வராஜ்: வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் அந்தப் பாதையில் எந்தவித சமரசமும் இன்றி பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் பா.இரஞ்சித் இயக்குநராக வந்த பிறகுதான் ஒடுக்கப்பட்ட சாதிகள் பற்றிய படம் வருகின்றன. அவரது வழியை பின்பற்றும் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தான் இயக்கிய மூன்று படங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கிறார். எனவே இவர்கள்தான் சாதியை வைத்து படம் எடுத்து பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
நல்லதுதான்: ஆனால் இவர்கள் அப்படி படம் செய்யவில்லை. யாரும் இதுவரை பேசாத விஷயங்களை இவர்கள் பேசுவதால்தான் ஒரு தரப்பினர் இவர்களை குறி வைக்கிறார்கள். இந்தக் காலத்தில் யாரு சார் சாதி பார்க்குறா என சமூக வலைதளங்களில் வேண்டுமானால் கூறலாம். ஆனால் இன்னமும் பல ஊர்களில் சாதிய கொடூரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் வெற்றி, இரஞ்சித், மாரி போன்றவர்கள் இதுபோன்ற படங்களை செய்வது பெரிய மாற்றத்தை நிகழ்த்தாவிட்டாலும் பிரிவினையை உண்டு பண்ணாது.மாறாக அனைவருக்கும் பலரது வலியை புரியத்தான் வைக்கும் என்கின்றனர் பலர். எனவே பேரரசு போன்றவர்கள் மறைமுகமாக விமர்சிப்பதைவிட சாதிய கொடூரங்கள் நிகழும்போது தைரியமாக குரல் கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு படைப்பாளிக்கு அழகு எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











