தாக்கப்பட்டார்களா பாடகர் மனோவின் மகன்கள்?.. வெளியான பகீர் வீடியோ!
சென்னை: நடிகர் மனோவின் மகன்கள் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அவர்களது இரண்டு ஊழியர்களை கைது செய்த காவல்துறையினர், மனோ மகன்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
பாடகர் மனோ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒரியா, இந்தி மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ள இவர், சில டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது மனோவின் மகன்கள் தாக்கப்பட்டதாக வெளியான புதிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் மனோ: பாடகர் மனோ மிகச்சிறந்த பாடகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா, இந்தி மொழிகளில் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர். விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டவர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞரை தாக்கியதாக மனோவின் மகன்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் சாப்பாடு வாங்க வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை முட்டிப் போட வைத்து மனோவின் மகன்கள் ரஃபி, சாஹிர் மற்றும் அவர்களின் ஊழியர்கள் தாக்கியதாகவும், இதில் அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு: இந்நிலையில் மனோவின் மகன்கள் மற்றும் அவரது ஊழியர்கள்மீது கொலைமுயற்சி, தாக்குதல் மற்றும் ஆபாசமாக பேசுதல் என 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் அந்த இரு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மனோவின் மகன்கள் ரஃபி மற்றும் சாஹிரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் குடிபோதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
புதிய சிசிடிவி வீடியோ: இதனிடையே தற்போது புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னதாக பாடகர் மனோவின் மகன்கள் மட்டுமே தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் தாக்குதலை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் உள்ளிட்டவர்கள் தங்களது நண்பர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுடன் மனோ வீட்டு வாசலில், அவரது மகன்களை கல் மற்றும் கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும் கீழே விழுந்த மனோவின் மகன்களை சிறுவன் கேங், கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
விசாரணை தீவிரம்: பாடகர் மனோ, எல்லா சூழ்நிலைகளிலும் அனைவரையும் கவர்ந்து வந்தவர். அவரது மகன்கள் ரஃபி மற்றும் சாஹிர் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மனோவின் மனைவியும் இந்த விஷயத்தில் மீடியா முன்பு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மனோவின் மகன்கள் மட்டுமே குற்றவாளிகளாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்ட விஷயம் வெளிவந்துள்ளது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











