ரகசிய அறை, டிஜிட்டல் லாக்கர்கள்..ரூ.200 கோடி வரி ஏய்ப்பு..வருமான வரித்துறையின் பகீர் அறிக்கை
சென்னை : கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி சினிமா எடுக்கப்பட்டதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரால் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், மேலும் சில தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தலர்கள் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடத்தப்படலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ரூ.200 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரு. 3 கோடி மதிப்பிலான நகைகள், டிஜிட்டல் ஆவணங்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.200 கோடி கணக்கில் வராத வருமான ஆவணங்கள் மற்றும் ரூ.26 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

வருமான வரித்துறை அறிக்கை
சினிமா தயாரிப்பாளர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் இதோ...சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் தொடர்பான இடங்களில் ஆகஸ்ட் 2 ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, வேலூரில் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல ரகசிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோத பண பரிமாற்றம், முதலீடுகள் ஆகியவற்றிற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளன.

லாபத்தை குறைத்து காட்டி உள்ளனர்
சினிமா பைனான்சியர்களிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத கடன் தொகை, கடன் வழங்கியதற்கான ப்ரொ நோட்டுக்கள், பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொகை ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் உள்ளன.வரி ஏய்ப்பு செய்வதற்காக தயாரிப்பு நிறுவனங்கள், படத்தின் லாபத்தை குறைத்து காட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. கணக்கில் காட்டப்படாத வருமானங்கள், கணக்கில் காட்டப்படாமல் பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

சட்ட விரோத முதலீடு
சினிமா விநியோகஸ்தர்களின் தியேட்டர்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் தியேட்டர் வருமானங்களை பிரித்து, மறைத்து வைத்து, உண்மையான வருமானத்தை குறைத்து காட்டி உள்ளனர்.

200 கோடி கணக்கில் வரவில்லை
சோதனையின் முடிவில் ரூ.200 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது. 26 கோடி மதிப்பிலான ரொக்க பணம், 3 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் நகைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











