அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக நின்ற தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்டு.. தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பு!
ஹைதராபாத்: தெலங்கு சினிமா உலகில் கடந்த வாரத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய நபராக அடிபட்டவர், தயாரிப்பாளர் தில் ராஜு தான். இவர் தயாரித்த கேம் சேஞ்சர் படம் பெரும் அடி வாங்கியது. இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான தில் ராஜு, தனது வீட்டையே விற்கும் நிலைக்கு வந்துவிட்டார் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில் இவரது பெயர் பரபரப்பான பெயராக இன்று அதாவது ஜனவரி 21ஆம் தேதி மாறியுள்ளது. அதாவது இவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இது மட்டும் இல்லாமல், புஷ்பா 2 படத்தினை தயாரித்த மைத்ரீ மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர், மைத்ரி நவீன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. படம் இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டு உள்ளது. இதுவரை படம் உலகம் முழுவதும் சேர்த்து சுமார் ரூபாய் 1,850 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்துள்ளது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால் வசூல் இந்த அளவுக்கு எகிறியுள்ளது. படம் தியேட்டரிலேயே ரூபாய் 2000 கோடிகள் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் படத்தின் தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் ரிலீஸ் உரிமையை தில் ராஜு வாங்கினார். அவருக்கு புஷ்பா 2 படம் பெரும் லாபம் ஈட்டிக் கொடுத்தது. அதன் பின்னர் இவரது தயாரிப்பில் ரிலீஸ் ஆன கேம் சேஞ்சர் படம் பெரும் தோல்விப்படமாக அமைந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய, தில் ராஜுவுடன் மீண்டும் ஒரு படத்தில் ராம் சரண் நடிக்க, ஒப்பந்தம் போட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க இன்று காலை முதல் தில் ராஜு வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புஷ்பா 2: தில் ராஜு வீடு மட்டும் இல்லாமல், மைத்ரீ மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மைத்ரி நவீன் வீட்டிலும், அலுவலங்களிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. இது தொடர்பான செய்திகள் தெலுங்கு சினிமா உலகில் மிகவும் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. வழக்கமாக ஒரு சினிமா பிரபலத்தின் வீட்டில் சோதனை நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இன்று நடைபெறுவது தெலுங்கு சினிமா உலகில் இருக்கும் மிகப்பெரிய இரண்டு தயாரிப்பாளர்களின் வீட்டில். அதுவும் புஷ்பா படத்தோடு தொடர்புடைய இருவரது வீட்டில் என்பதால், சினிமா உலகமே வழக்கத்தைவிட கூடுதல் பரபரப்பாக இயங்கி வருகின்றது.

அல்லு அர்ஜுன்: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகை பரிதாபமாக இறந்தார். இதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தான் என தெலங்கானா அரவு குற்றம் சாட்டுகின்றது. அல்லு அர்ஜுன் படம் பார்க்க வருவது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். இதனால் பதியப்பட்ட வழக்கில், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இடைக்கால ஜாமீன் வாங்கி, வெளியே வந்தார்.

உள்நோக்கம்: இந்த விவகாரத்தில் தெலங்கானா, அரசு மீது திரைத்துறையினர் குறிப்பாக புஷ்பா 2 படக்குழுவினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. அதனை வெளிப்படுத்தவும் செய்தனர். இப்படியான நிலையில், புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் மற்றும் விநியோகஸ்தர் தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதால், இதன் பின்னால் வேறு உள்நோக்கம் இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதில் தில் ராஜு விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தினைத் தயாரித்தார். அதேபோல், மைத்ரி நவீன், அஜித்தின் குட் பேட் அக்லி படத்தினை தயாரித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.



Click it and Unblock the Notifications











