கப்பல் ஏறி போயாச்சு முதல் நாட்டுக்கூத்து வரை.. சுதந்திரத்தீயை வளர்த்த டாப் 5 பிரம்மாண்ட பாடல்கள்!
சென்னை: வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமையுடன் மனிதத்துடன் வாழ வேண்டும் என்பதை ஒரு வேதமாகவே கடைபிடித்து வாழும் இந்திய தேசத்தின் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
நட்பு நாடி வந்த வெள்ளையர்களை விருந்தோம்பலுக்குப் பெயர் போன நம் தேசம் விரட்டி அடிக்காமல் ஆரம்பத்தில் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்ற நிலையில், இங்குள்ள பிரிவினைகளை புரிந்துக் கொண்டு இந்த தேசத்தை எளிதில் அடிமைப்படுத்தி விடலாம் என வெள்ளையர்கள் திட்டம் போட்டு அடிமைப்படுத்தினர்.

அவர்களை நாடு முழுவதும் வலிமையுள்ள எண்ணற்ற தாய்நாட்டு பற்றாளர்கள் எதிர்த்து போரிட்டு மாண்டனர். அந்த விஷயங்களை நமக்கு பிரம்மாண்டமாக எடுத்துக் காட்டிய சில சினிமா பாடல்கள் பற்றி இங்கே பார்க்கலாம் வாங்க..

கப்பலேறி போயாச்சு - இந்தியன்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான இந்தியன் படத்தில் சுதந்திரத்துக்கு பின்னர் ஊழலுக்கு மக்கள் எப்படி அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர் என்பதை காட்டியிருந்தார் ஷங்கர். மேலும், அந்த படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட பிளாஷ்பேக் போர்ஷனில் சேனாபதி வெள்ளையர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி சுதந்திரத்துக்குப் பின் தன் மனைவியை காணும் காட்சியில் இடம்பெற்ற "கப்பலேறிப் போயாச்சு.. சுத்தமான நாடாச்சு கண்ணம்மா" பாடலை ஏ.ஆர். ரஹ்மான் போட்டு மாஸ் காட்டியிருப்பார்.
தாயின் மணிக்கொடி - ஜெய்ஹிந்த்: சுதந்திர தினத்தன்றே பிறந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஏகப்பட்ட நாட்டுப்பற்று படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார். 1994ம் ஆண்டு வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் இடம்பெற்ற "தாயின் மணிக்கொடி.. தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்" பாடல் ஏகப்பட்ட பள்ளிகளிலேயே ஆண்டு தோறும் கலை நிகழ்ச்சிகளில் இசைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அச்சம் அச்சமில்லை - இந்திரா: சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் அனுஹாசன், அரவிந்த்சாமி நடித்த இந்திரா படத்தில் இடம்பெற்ற "இனி அச்சம் அச்சமில்லை.. அடிமை எண்ணம் இல்லை.. காலம் இங்கே கூடிப்போச்சு.. கண்ணீர் மிச்சமில்லையே" பாடல் வரிகளும் இந்திய சுதந்திரத்தீயை மக்கள் மனதிலும் இளைஞர்கள் மத்தியிலும் இன்னமும் விதைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
கோலே - ஆர்ஆர்ஆர்: ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக மீண்டும் வெள்ளையர்களை விரட்டி விரட்டி அடித்த படமாக ஆர்ஆர்ஆர் படமும் அந்த படத்தின் பாடல்களும் உருவாகி இருந்தன. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் நடித்திருந்த அந்த படத்தின் கோலே பாடலில் "அச்சமில்லை சொல்லிச்சே எட்டயபுரத்து கோலே" என பாரதியார் முதல் சுதந்திரத்துக்காக வீரத்துடன் செயல்பட்ட நேதாஜி, சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், ஜான்சி ராணி, கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை என பலரை நம்ம ஊருக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் காட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்தியர்களின் எழுச்சியை சமீபத்தில் சிறப்பாக காட்டியிருந்தனர்.
நாட்டுக்கூத்து: அதே ஆர்ஆர்ஆர் படத்தில் எங்களுடன் நடனமாடிக் கூட வெள்ளையர்களால் ஜெயிக்க முடியாது என மரகதமணி இசையில் ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் போட்ட நாட்டுக்கூத்து பாடல் ஆஸ்கர் விருதையே வென்று மீண்டும் மக்கள் மனங்களில் இந்தியன் என்கிற கம்பீர உணர்வை அணையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











