இந்த இரவு தீர்வதற்குள்ளே...வைரமுத்துவின் நாட்படு தேறல் இரண்டாவது பாடல்
சென்னை : கவிஞர் வைரமுத்து, தனது வரிகளில் 100 பாடல்களை 100 இயக்குனர்கள், 100 பாடகர்கள், 100 இசையமைப்பாளர்கள் என்ற புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறார். நாட்படு தேறல் என்ற தலைப்பில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்த பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இப்பாடல்களை வாரத்திற்கு ஒரு பாடல் என 100 வாரங்களுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளார் வைரமுத்து. ஏப்ரல் 18 ம் தேதி நாட்படு தேறலின் முதல் பாடல் வரிகளும், அதைத் தொடர்ந்து பாடல் வீடியோவும் வெளியிடப்பட்டது. நாக்கு சிவந்தவரே என துவங்கும் அந்த பாடல், மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 25 ம் தேதி, இந்த இரவு தீர்வதற்குள்ளே என துவங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கான வைரமுத்துவின் வரிகளுக்கு அனில் ஸ்ரீநிவாசன் இசை அமைக்க, ஆர்.பி.ஷ்ரவன் குரல் கொடுத்துள்ளார். இப்பாடலை அருள்.எஸ் இயக்கியுள்ளார்.
வைரமுத்துவின் யூட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல், இதுவரை ஒரு லட்சம் பார்வைகளையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த பாடல் கலைஞர் டிவி.,யிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரவு தீர்வதற்குள்ளே பாடல் வரிகள்...
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
ஒரு கோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி ?
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி ?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி ?
உனக்கும் எனக்கும் ஏன் சமூக இடைவெளி ?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில் சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி ?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?


Click it and Unblock the Notifications











