இந்தியன் 2 படக்குழுவினருடன் சண்டைப் போட்ட கிராம மக்கள்.. செங்கல்பட்டில் பரபரப்பு.. என்ன ஆச்சு?
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆந்திரா, திருப்பதி என நடைபெற்று வந்த நிலையில், சமீப காலமாக சென்னையை சுற்றிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், திடீரென படக்குழுவுக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கிராம மக்களை எச்சரித்து அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

செங்கல்பட்டில் ஷூட்டிங்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, கடப்பா என நடைபெற்று வந்த நிலையில், சமீப காலமாக பனையூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக குவிந்து வருகின்றனர்.

வாக்குவாதம்
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டியில் உள்ள டச்சுக்காரர்கள் கோட்டையில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது திடீரென கிராம மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

டொனேஷன் கேட்ட ஊர்மக்கள்
இந்தியன் 2 படப்பிடிப்பு அந்த பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், கிராம மக்கள் சிலர் படக்குழுவினருடன் சென்று நன்கொடை கேட்ட நிலையில், தான் இப்படியொரு வாக்குவாதம் சண்டையாக மாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊர் மக்கள் தகராறு செய்வதாக படக்குழு போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர்கள் குவிந்தனர்.

கிராம மக்கள் விரட்டியடிப்பு
நன்கொடை என்பது அவர்களே விருப்பப்பட்டு கொடுப்பது தான் என்றும் அதற்காக கிராம மக்கள் பிரச்சனை செய்வது சரியல்ல என அங்கே வந்த காவல் அதிகாரிகள் கிராம மக்களை எச்சரித்து விரட்டி அடித்துள்ளனர். இதன் காரணமாக கடைசி நாள் படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்போ ரிலீஸ்
இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இயக்குநர் ஷங்கர் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறைவு செய்த பின்னர் தான் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











