சூப்பர்... இந்தியன் 2 படத்துக்காக இப்படியொரு பாடலை போட்ட அனிருத்.. “நீலோற்பம்” பாடல் எப்படி?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் இரண்டாவது பாடலான நீலோற்பம் பாடல் தற்போது வெளியானது.
ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டைலில் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது வெளியாகும் ஒவ்வொரு பாடல்களிலும் இருந்தும் தெளிவாக தெரிகிறது. முதல் பாடலான பாரா பாடல் பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாடல் போல இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள நீலோற்பம் பாடல் செம மெலோடியாக ஏ.ஆர். ரஹ்மான் சாயலிலேயே உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாடலாசிரியர் தாமரை வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலில் லிரிக்ஸ் மொத்தமும் கவிதையாக உள்ளது. இந்த பாடலை பாடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பது முதல் முறை கேட்கும் போதே தெரிகிறது.
நீலோற்பம் நீரில் இல்லை: ஆம்பல், மெளவல் என சிவாஜி படத்தில் தாமரை மலரின் தூய தமிழ் பெயர்கள் பாடல் வரிகளாக மாறியது போல அல்லி மலரின் தூய தமிழ் பெயர்கள் இந்தியன் 2 படத்தில் செகண்ட் சிங்கிள் பாடலில் பாடல் வரிகளாக மாறி இருக்கிறது. அனிருத் இசையில் காதலர்கள் விரும்பிக் கேட்கும் ரொமான்டிக் பாடலாக இந்த பாடல் உருவாகி இருக்கிறது.
ஷங்கர் பாட்டு போல தெரியலையே: ஷங்கர் படத்தின் பாடல்கள் என்றாலே பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் சாதாரண ரொமாண்டிக் பாடல் என்றாலும் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என சென்று விடுவார். சாதாரண கஃபே பாடல் போல இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஒரே ஒரு லிப்ஸ்டிக்கை மட்டுமே வைத்து பாடலை ஓட்டியிருப்பது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது படத்தில் பார்த்தால்தான் தெரியும்.
தாமரை வரிகள்: " தடுக்கி நீ விழ வேண்டும் என நினைப்பேன்" என ஹீரோ ஹீரோயினை பார்த்து சொல்வாரா? அப்படி சொல்வதற்கு பின்னால் இருக்கும் சுயநலத்தை, அப்படி விழும்போது நான் தாங்கி பிடிக்க வேண்டும் என்கிற வரிகளால் அழகான காதல் பாடலை கொடுத்திருக்கிறார் தாமரை. ஆனால், பாடல் முழுக்கவே கஷ்டமான வரிகளை போட்டு எழுதியது போலவே இருப்பது கேட்ட மாத்திரத்திலேயே பிடிக்கும் அளவுக்கு இல்லை என்கிற உணர்வைத்தான் கொடுக்கிறது. அபி வி மற்றும் ஸ்ருதிகா சமுத்ரலா இருவரும் பாடிய விதம் மற்றும் அனிருத்தின் இசை பாடலை ரசிக்க வைக்கிறது.
ஹிட் அடிக்குமா?: "அன்பே அன்பே கொல்லாதே", "டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா", "அய்யங்காரு வீட்டு அழகே", "என்னோடு நீயிருந்தால்", "சஹானா சாரல் தூவுதோ" என ஷங்கர் இயக்கத்தில் வெளியான மெலோடி பாடல்கள் அளவுக்கு இந்த பாடல் இருக்கிறதா? என்றால் பதில் இல்லை என்று தான் சொல்லத் தூண்டுகிறது. இந்த படத்துக்கும் கதைக்கும் பொருத்தமாக அமைந்தால் பாடல் ரசிகர்களை கவரும். சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் பாடல் என்பதால் பெரியளவில் ஹிட் அடிக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications











