Pahalgam Terror Attack: மனுசனுங்களா அவங்க.. சீக்கிரம் பதிலடி கொடுக்கனும்.. கொந்தளிக்கும் பிரபலங்கள்!
காஷ்மீர்: ஒட்டுமொத்த இந்தியாவும் கிட்டத்தட்ட வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளது எனக் கூறலாம். காரணம், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுமார் 28 பேட் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது மட்டும் இல்லாமல் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கவலைக்கிடமாக சிலர் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான நிலையில் தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் நாடு திரும்பியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். துப்பாக்கி சூடு நடந்த பின்னர், உறவுகளை இழந்தவர்கள் அவர்கள் உடல்களுக்கு அருகில் கதறி அழும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. மேலும் பலர் இந்திய ராணுவம் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் இது தொடர்பாக தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். நடிகர் பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " பஹல்காமில் நடந்துள்ள சம்பவத்தை நினைத்து இதயம் நொறுங்குகிறது. அதே நேரத்தில் கோபமும் வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு உகந்த நீதி விரைவில் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர்: அதேபோல் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " இந்த கொடூர தாக்குதலில் உயிரை இழந்தவர்களை எண்ணி வருத்தப்படுகிறேன். இந்த கொடூரச் செயல் செய்தவர்கள் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அவர்கள் கோழைகள். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என நான் பிராத்தனை செய்கிறேன். உங்கள் துக்கத்தில் நானும் உடன் நிற்கிறேன். இந்த அளவிட முடியாத துக்கத்தில் இருந்து கடவுள் உங்களை விரைவில் மீட்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமார்: அதேபோல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், " பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டினால் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என பதிவிட்டுள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது எக்ஸ் பக்கத்தில், " தீவிரவாதிகள் நம் மக்களை கொன்று உள்ளார்கள். இதை மன்னிக்க முடியாது. நாம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தகுதியானதை திருப்பிக் கொடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
சோனு சூட்: அதேபோல் நடிகர் சோனு சூட், " பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நாகரீக உலகில் தீவிரவாதிகளுக்கு எந்த இடமும் இருக்க கூடாது. இந்த கொடூர தாக்குதலில் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை பிராத்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா முழுவதுமே கண்டனக் குரல்களும் கோபக் குரல்களும் எழுந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications











