Robo Sankar: யாரு கண்ணு பட்டுச்சோ.. ICU-வில் ரோபோ சங்கர்.. இன்ஸ்டாகிராமில் இப்படி சொல்லிட்டாரே இந்திரஜா
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமானதால் அவரை, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி மருத்துவர்கள் முழுக் கண்காணிப்பில் அவரைப் பார்த்து வருகிறார்கள் . இச்சூழலில், தனது தந்தையின் உடல்நிலை குறித்து பலரும் பலவிதமாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதால், அதற்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, அவரது மகள் இந்திரஜா சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரோபோ சங்கர் தனது தனித்துவமான நடனத்திறமை மற்றும் நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு?" மற்றும் "அது இது எது" போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். அவரது "ரோபோடிக்" பாணி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் உருவானது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவருக்கு, வெள்ளித்திரையிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக "மாரி", "வேலையில்லா பட்டதாரி", "காஷ்மோரா" , "வாயை மூடி பேசவும்", "வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
ரோபோ சங்கர் மகள்: அவரது மகள் இந்திரஜா சங்கர், நடிகர் விஜய் நடித்த "பிகில்" திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடித்த படமான விருமன் படத்தில் அதிதி சங்கருக்கு தோழியாக நடித்தார். இந்திரஜா, தனது தந்தையைப் போலவே சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான மற்றும் சுவாரசியமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரது நடவடிக்கைளை தெரிந்து கொள்ளவே பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஐ.சி.யூ: தற்போது ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.சமூக வலைத்தளங்களில் ரோபோ சங்கரின் உடல் நலம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் பரவி வருகின்றன. சிலர் அவரது உடல்நலப் பராமரிப்பு பற்றியும், சிலர் அவரது வாழ்க்கை முறை பற்றியும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்: இந்த விமர்சனங்கள், ரோபோ சங்கரின் உடல் நிலையில் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் அவரது குடும்பத்தினரை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , "நேரம் நல்லா இல்லனா தேவையில்லாதவன் கூட தேவை இல்லாம பேசிட்டு போவான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள், தனது தந்தையின் உடல்நிலை குறித்த விமர்சனங்களுக்கு அவர் அளித்த தக்க பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. ரோபோ சங்கர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வருவது மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்திருக்கும் நம்பிக்கை அளித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications