திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் கடந்த வருடம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்புதான் அவரது மகள் இந்திரஜாவுக்கு திருமணமும் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
நடிகர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டிருந்த ரோபோ சங்கருக்கு சில வருடங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் போனது. எப்படியோ அவரை அதிலிருந்து குடும்பத்தினர் மீட்டு கொண்டு வந்துவிட்டார்கள். அதனையடுத்து அவர் சில கெட்ட பழக்கங்களை மொத்தமாக ஒதுக்கிவிட்டார். கரியரில் முழு கவனத்தையும் செலுத்திய சூழலில்; திடீரென கடந்த வருடத்தில் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரோபோ சங்கரின் மகள்: இதற்கிடையே சங்கரின் மகள் இந்திரஜாவும் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நடிகையாக இருக்கிறார். குணசித்திர வேடங்கள் ஏற்று கலக்கிவரும் அவர்; சில வருடங்களுக்கு முன்புதான் கார்த்திக் என்பவரை திருமணம் செய்திருந்தார். அதனையடுத்து ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "என்னுடைய திருமணம் நடந்ததிலிருந்து இப்போதுவரை பலவிதமான விமர்சனங்களை நான் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.நான் குழந்தை பெற்றுக்கொண்டது இயல்பாக நடந்த ஒன்று.
அப்படி சொன்னார்கள்: ஆனால் சிலரோ நான் வாடகை தாய் மூலம் பெற்றேன், டெஸ்ட் டியூப் பேபி என்றெல்லாம் சொன்னார்கள். அதை கேட்டு எனது மனம் அவ்வளவு வேதனையடைந்தது. உண்மை தெரியாமல் யாரையும் அப்படி பேச வேண்டாமே. மார்ச் மாதத்தில் திருமணம் செய்துவிட்டு எப்படி அதற்குள் குழந்தை என்றெல்லாம் கேட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் நான் குழந்தை பெற்றது இயற்கையாக நடந்த விஷயம்தான். பலருக்கு அது புரியவே இல்லை. நீ எப்படி கர்ப்பம் ஆனாய் என ஒரு பெண்ணிடம் வந்து மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். என்னிடமும் கேட்டார்கள். இதெல்லாம் சரியான கேள்வியா?.
அது பெரிய விஷயம்: ஒரு பெண் கர்ப்பமடைவது பெரிய விஷயம். அது கடவுள் கொடுத்த வரம். அந்த நேரத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரிய போராட்டம். அதனால் அதை பற்றி தேவைய்ல்லாமல் விமர்சிப்பது தவறு. என்னுடைய கர்ப்ப காலத்தில் பெரிய பிரச்னை எல்லாம் ஏற்படவில்லை. கடைசி நேரத்தில்தான் மருத்துவர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என சொன்னார்கள். குடும்பத்தில் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நான் கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தேன்.
அவன் பெரிய வரம்: எனது மகன் நட்சத்திரன் எங்களது பெரிய வரம். அறுவை சிகிச்சை செய்யும்போது எனக்கு எந்த வலியும் தெரியவில்லை. பிறகு எழுந்து நிற்க சொன்னார்கள். அப்போதுதான் உண்மையான வலி என்னவென்று தெரிந்தது. ஆனால் அந்த வலியெல்லாம் குழந்தையை கையில் வாங்கும்போது மறைந்துவிட்டது. கர்ப்பம் முதல் பிரசவம் வரை ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களும், வலிகளும் நிறைந்திருக்கும். அதனால் ஒரு பெண் தாயாக மாறும்போது அவளது கடினமான சூழலை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications















