ஜானகி அம்மாவின் மகன் குடும்பம் பற்றி தெரியுமா?.. அவர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சோகமா?.. தனிமையில் கொடுமை
சென்னை: பின்னணி பாடகி ஜானகி அம்மாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். 65 வயதான முரளி கிருஷ்ணா உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஜானகிக்கு மிகப்பெரிய இடியாக இறங்கியிருக்கிறது. பலரும் அவருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்துவருகிறார்கள். இந்த வயதில் இதனை அவர் எப்படி தாங்கிக்கொள்ள போகிறார் என பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
இந்திய திரையிசையில் தவிர்க்க முடியாதவர் எஸ்.ஜானகி. அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் பல லட்சம் மக்களுக்கு தாலாட்டு பாடுவது போன்றுதான் இருக்கும். தனது குரலில் ஏகப்பட்ட வித்தைகளை வைத்துக்கொண்டு பார்ப்பதற்கு அவ்வளவு எளிமையாக உலாவுபவர். தென்னிந்திய நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் எம்.எஸ்.வி தொடங்கி அனிருத்வரை பல இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடிவிட்டார்.
சாது மிரண்டால்: ஜானகியின் திறமை இன்னமும் அதிகம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகும். கடந்த 2013ஆம் ஆண்டு அவருக்கு ஒன்றிய அரசு பத்மபூஷன் விருதினை வழங்கியது. ஆனால் இது தனக்கு ரொம்பவே தாமதமாக கொடுக்கப்படுவதாக சொல்லி அதனை வாங்குவதற்கு மறுத்துவிட்டார். அவரது அந்த முடிவு அப்போதைக்கு பெரிய கவனத்தை ஈர்த்தது. உண்மையான கலைஞருக்கு இருக்கும் நேர்மை ஜானகி அம்மாவுக்கும் இருப்பதை பார்த்து அனைவருமே சந்தோஷப்பட்டார்கள்.

எக்கச்சக்க பாடல்கள்: அவர் 17 மொழிகளில் கிட்டத்தட்ட 50,000 பாடல்கள்வரை பாடியிருக்கிறார். தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றன. ராம பிரசாத் என்பவரை திருமண செய்திருந்த அவர் முரளி கிருஷ்ணா என்ற மகனையும் பெற்றெடுத்தார். துரதிர்ஷ்டவசமாக கணவர் உயிரிழக்க; தனது மகனை தனி தாயாக இருந்து வளர்த்து ஆளாக்கினார். மகன் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் ஜானகி அம்மா.
உயிரிழந்த முரளி: சூழல் இப்படி இருக்க 65 வயதாகும் முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரது உயிரி பிரிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முரளி கிருஷ்ணாவின் இறுதி சடங்குகள் இன்று மாலை மைசூரில் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் முரளி கிருஷ்ணாவின் திருமண வாழ்க்கையும் பெரிய சோகத்துடன்தான் நகர்ந்தது என கூறப்படுகிறது.
என்ன ஆனது?: அதாவது திரைத்துறையில் ஈடுபாட்டோடு இருந்த முரளி சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், தமிழ்நாட்டுக்கும் அடிக்கடி வரும் அவர் பரதநாட்டிய கலைஞர் உமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மகள்கள் பிறந்த பிறகு கொஞ்ச காலம் நல்லபடியாக போன அவர்களது திருமண வாழ்க்கை திடீரென விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கான காரணங்களை ஆராயாமல் கடைசிவரை தனது தாய் ஜானகியுடனேயே வாழ்ந்து வந்தார் முரளி. இப்போது தனக்கு துணையாக இருந்த மற்றும் தான் துணையாக இருந்த மகனை இழந்து தனிமையில் தவிக்கிறார் ஜானகி அம்மா.


Click it and Unblock the Notifications











