Vijay: உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? விஜய்க்கே ஃபயர் விட்ட இன்ஸ்டா பிரபலம்
சென்னை: வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பல வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டன. தீயணைப்புத் துறையினரின் சிறப்பான நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணியினால் பொதுமக்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. இப்படி இருக்கும்போது, இந்த சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தவெகவைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் களத்திற்குச் சென்றுள்ளனர்.
களத்துக்குச் சென்ற தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பெண் நிர்வாகிகளை காவல்துறையினர் தாக்கியதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தவெக அதாவது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவுக்கு, அண்மையில் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான வைஷ்ணவி உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, இந்த சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீ விபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்,
தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.

குற்றச்சாட்டு: இதனைப் பார்த்த காவல்துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறி செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காவதி (வயது 45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல்துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிர் அணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல்துறையினர் பிடித்து இழுத்து தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள்: தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா? பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன? மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் போராட்டம்: காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப்பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதை தெரிவித்துகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டா பிரபலம்: இவரது பதிவுக்கு இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " உங்கள் கட்சியை சேர்ந்த மகளிர் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றவுடன் நீங்கள் ஒரு கட்சித் தலைவராக கண்டனம் தெரிவித்துள்ளீர்கள். சிறப்பு!! ஆனால் என்னை கடந்த ஒரு மாத காலமாக உங்கள் கட்சித் தொண்டர்கள் மிக ஆபாசமான வார்தைகளாலும் தரக்குறைவாகவும் வசைப்பாடுகிறார்கள், அதை கண்டித்து தாங்கள் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை!?
தக்காளிச் சட்னி: உங்கள் கட்சி பெண்களை மற்றவர்கள் தாக்கினால் மட்டும் தான் கண்டனமா... உங்கள் கட்சி அல்லாத பெண்களை உங்கள் கட்சிக்கார்ர்கள் தாக்கினால் அப்பொழுது நீங்கள் கட்சித் தலைவராக கண்டனம் தெரிவிக்க மாட்டீர்களா!? உங்களுக்கு வந்தா ரத்தம்.... எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!? What bro very wrong bro!!" என்று பதிவிட்டுள்ளார். வைஷ்ணவி தவெகவில் இருந்தபோது, அவருக்கு கட்சி நிர்வாகிகளாலே மிரட்டலும் அவமதிப்பும் தொடர்ந்து இருந்து வந்ததாக தெரிவித்து வெளியேறினார். அதன் பின்னர் திமுகவில் இணைந்த இவர் தவெகவை மற்றொரு பாஜக என்றும் விமர்சித்தார். இப்போது விஜய்யின் பதிவுக்கு அவரது பதில் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
காவல்துறை விளக்கம்: தவெக பெண் நிர்வாகிகள் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து தமிழ்நாடு காவல்துறை சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், " வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு சில அமைப்பின் நிர்வாகிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளின் தொடர்ச்சியாக மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின்படி. செய்திகளில் வெளியானது போன்று காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை. மேலும். அவ்விசாரணையில் ஒரு சிலர் அவர்கள் சார்ந்த கட்சியில் அங்கீகாரம் பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருவதாக தெரியவருகிறது. சென்னை இருப்பினும். பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளர் (குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு) நியமித்து உத்தரவிட்டுள்ளார்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











