இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்
சென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
அமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார்.
அமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன்.
இப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா?

50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.
இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே.
இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா?
அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா?
தைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.
தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ? ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்!!
-இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











