கமலின் த்ரிஷ்யம் ரீமேக்குக்கு தடை!
கொச்சி: மலையாள ப்ளாக்பஸ்டர் த்ரிஷ்யம் படத்தை தமிழில் கமல்ஹாஸனை வைத்து ரீமேக் செய்ய கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. அரபு நாடுகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் ரிலீசானது. அங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. கன்னடத்தில் பி வாசு இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழில்
தமிழிலும் கமல், கவுதமி அல்லது அபிராமி ஜோடியாக நடிக்க திரிஷ்யம் ரீமேக் ஆகிறது. இதற்கான படப் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இதில் கமல் கலந்து கொண்டார்.

தடை
இதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் பேசி உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வழக்கு
இந்த நிலையில் கூத்தமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ‘த்ரிஷ்யம்' படத்தை தமிழில் ரீமேக் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

எனக்கே உரிமை
அவர் தாக்கல் செய்த மனுவில், "த்ரிஷ்யம் படம் நான் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கதைக்கான உரிமை என்னிடம்தான் உள்ளது. ரீமேக் செய்யும் உரிமையும் எனக்கேதான்.

தடை
என் அனுமதி பெறாமல் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தமிழில் ரீமேக் செய்ய தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, த்ரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











