ஆர்சிபியை சின்ராசா நீங்களே மாத்திட்டீங்க.. இருங்கடா.. எத்தனை ஐபிஎல் கப் வாங்கி அடுக்கப்போறாங்க பாருங்க!
சென்னை: 18வது ஐபிஎல் சீசன் நாளை அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த சீசன், ஒரு மெகா ஏலத்திற்கு பிறகு நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் ஏதோ ஒரு வகையில் பலமான அணியாக தான் உள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த ஆண்டு, எந்த அணி கோப்பையை வெல்லும் என கணிக்க முடியாத அளவுக்கு உள்ளன. ஆனாலும் சில அணிகள் மற்ற அணிகளை விட பலமாகத்தான் உள்ளது.
ஐபிஎல் நெருங்கிவிட்டால், ஐபிஎல் ரசிகர்கள் தொடங்கி, மீம் கிரியேட்டர்கள் வரை பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் குறித்து மீம்களைப் பகிர்வது வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டது. இதில் சென்னை அணி ரசிகர்கள் மும்பை அணியை கலாய்ப்பதும், மும்பை அணி ரசிகர்கள் சென்னை அணியை கலாய்ப்பதும் வழக்கமாக நடைபெற்று வரும் விஷயம் தான் என்றாலும், ஐபிஎல் தொடரில் உள்ள பெரும்பாலான அணி ரசிகர்கள் கலாய்க்கும் ஒரு அணி என்றால், அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான்.
காரணம், பெங்களூரு அணி மற்ற அணிகளை விடவும் பலமான அணியாக இருந்த காலகட்டத்தில் கோப்பையை வெல்லவில்லை. மேலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக இருந்தார். ஆனாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஈ சாலா கப் நம்தே என்ற நம்பிக்கையில் களமிறங்கும் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒருவகையில் சொதப்பி வருகிறது.

விராட் கோலி: லீக் போட்டிகளில் கலக்கலாக செயல்படும் பெங்களூரு அணி, நாக் அவுட் சுற்றில் தோல்வியைத் தழுவி விடுவது வாடிக்கையாக செய்து வருகிறது. 2009, 2011 மற்றும் 2016 என மொத்தம் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு சென்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த டேனியல் வெட்டோரிக்குப் பின்னர், விராட் கோலி கேப்டனாக இருந்தார். அதன் பின்னர் பாஃப் டூ பிளெசிஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இம்முறை கோப்பையை வென்று, கடந்த 18 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடும், விராட் கோலிக்கு சமர்ப்பணம் செய்வோம் என அந்த அணி வீரர்கள் உறுதியோடு இருக்கிறார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பைக்கு அருகில் சென்றும் வெல்ல முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் விஷயங்களில் இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒன்று, பெங்களூரு அணியின் மைதானம். அதாவது பெங்களூரு அணி வீரர்கள் பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் அதிகம் விளையாடுகிறார்கள். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம். ஆனால் மற்ற மைதானங்கள் பேட்டிங்கிற்குச் சாதகமானதாக இல்லை. பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பெங்களூரு அணி படுதோல்வியைச் சந்தித்த வரலாறு எல்லாம், கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்றது, ஐபிஎல் ரசிகர்களுக்கே தெரியும்.
பெங்களூரு அணி பேட்டிங்கில் பெரும்பாலும் பலமான அணியாக இருந்துள்ளது. இப்போதும் பலமான அணியாக உள்ளது. அதற்கு காரணங்களில் ஒன்றாக இருப்பது, விராட் கோலி. விராட் கோலி விக்கெட்டை கைப்பற்றிவிட்டாலே, ஆட்டத்தை வென்றாத அணிகள் இன்றைக்கும் உள்ளது. இப்போதும் கூட சில அணிகளின் திட்டங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம். அந்த அளவுக்கு விராட் கோலி அட்டகாசமான வீரராக திகழ்கிறார். பேட்டிங்கில் என்னதான் பேட்ஸ்மேன்கள் அட்டகாசமாக விளையாடி இமாலய இலக்கைக் குவித்தாலும், பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிவிடுகிறார்கள். அதற்கு பவுலர்களை காரணமாக கூறிவிட முடியாது. மைதானத்தின் தன்மை அப்படிப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பெங்களூரு அணியில் இருக்கும் மற்றொரு பிரச்னை என்றால் அது, விராட் கோலியின் ஆக்ரோசமான ஆட்டம். அதாவது, விராட் கோலி ஆட்டத்தில் குறிப்பாக ஃபீல்டிங் செய்யும்போது எதிரணி வீரர்களிடம் மிகவும் ஆக்ரோசமாக நடந்து கொள்வது எல்லாம், விளையாட்டின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது என ரசிகர்களே உணரும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்துள்ளது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் சென்று முறைத்துப் பார்த்தது எல்லாம் ஒரு சிறந்த வீரருக்கு அழகில்லை என பலரும் விமர்சித்தார்கள்.
அதேபோல், எதிரணி வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறும்போது அவர்களை நோக்கி ஓடிச் சென்று ஆக்ரோசமாக கத்துவது, எதிரணி வீரர்களை சீண்டுவதைப்போல் சைகைகள் காட்டுவது என ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தார். ஆனால் விராட் கோலியிடம் இந்த ஆக்ரோசம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது. ரசிகர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல போராடிக்கொண்டு உள்ளார்.
ரசிகர்கள்: பெங்களூரு அணியை பொறுத்தமட்டில், ரசிகர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். மற்ற அணி ரசிகர்கள் என்னதான் கலாய்த்தாலும் தங்களது அணியை விட்டுக் கொடுக்காமல், எப்போதும் அணிக்கு தங்களது ஆதரவை கடந்த 18 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த ஆண்டும் பெங்களூரு அணியை கலாய்த்து மீம்ஸ் பகிரப்பட்டு வருகிறது.

மீம்: அதில் ஒரு வீடியோ மீமில், சூர்யவம்சம் படத்தில் இருக்கும் காட்சியில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சின்னராசு கதாபாத்திரம்தான் விராட்கோலியாகவும், அவரது சகோதரர்களாக தோனியும் ரோஹித் சர்மாவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அதில், தோனியை அறிமுகம் செய்து அவரிடம் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வைத்துள்ளார், ரோகித் ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. விராட் கோலி குறித்து கூறும்போது, அவர் குறித்து கூற அந்த அளவிற்கு அவர் பெரிய ஆள் இல்லை எனக் கூறப்படுகிறது.
தேவயானி: இந்த வீடியோ மீம்மைப் பார்த்த ரசிகர்கள், விராட் கோலியை சூரிய வம்சம் சின்ன ராசா நீங்களே மாத்தீட்டிங்க. இனி பெங்களூரு அணி கோப்பைகளை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது. வரும் காலங்களில் கோப்பைகளை வாங்கி அடுக்குவோம். அதைப் பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறி வருகிறார்கள். ஆர்.சி. பி ரசிகர்களின் இந்த நம்பிக்கையைப் பார்த்த மற்ற அணியின் ரசிகர்கள், விராட் கோலி சின்னராசு என்றால் அனுஷ்கா சர்மா தானே தேவயானி, அப்படிப் பார்த்தால், தேவயானி வந்து பல வருடம் ஆகிவிட்டது, ஆனால் நீங்க இன்னும் கப் அடிக்கலையே என கிண்டலடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











