அந்த மயான அமைதி என்னை கொன்னுடுச்சு.. வடிவேலு படத்தால் பட்ட அவமானம்.. மேடையில் கதறிய இயக்குநர்!
சென்னை: இறுகப்பற்று படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன் சமீபத்தில் நடந்த அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியபடி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடிப்பில் வெளியான போட்டா போட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் யுவராஜ் தயாளன். வடிவேலுவின் தெனாலிராமன் மற்றும் எலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இறுகப்பற்று இயக்குநர்: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்நதி நடிப்பில் உருவாகியுள்ள இறுகப்பற்று படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இறுகப்பற்று படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ் தயாளன் எலி படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைத்து கண்கலங்கியபடி பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.
எலி படம் தந்த வேதனை: வடிவேலு, சதா நடிப்பில் வெளியான எலி திரைப்படம் 2015-ல் ரிலீசானது. அந்த படத்திற்கு பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து இறுகப்பற்று படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளார் யுவராஜ் தயாளன்.
இதே பிரசாத் ஸ்டுடியோவில் தான் எலி படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் ஒரே மயான அமைதி நிலவியது. வடிவேல் சார் என்னிடம் படம் எப்படி இருக்குன்னு கேளுங்க அப்படின்னு சொன்னார். நான் உங்ககிட்ட வந்து அதே கேள்வியை கேட்ட போது மீண்டும் அதே மயான அமைதியே நிலவியது.
மயான அமைதி கொன்னுடுச்சு: இப்படி ஒரு மயான அமைதி நல்ல தரமான படத்திற்கு கிடைக்கும் அல்லது படம் நல்லா இல்லைனாலும் வரும். எனக்கு புரிஞ்சிடுச்சு இது இரண்டாவது விஷயத்துக்கான அமைதிதான் என்று. அங்கிருந்து வடிவேலு சாருடன் கிளம்பி காரில் சென்று கொண்டிருந்தபோது, காவிரி கார்னரை தாண்டவில்லை காரை நிறுத்துங்க சார் நான் கொஞ்சம் இறங்கி இருக்கிறேன் அப்படின்னு சொன்னேன்.
வடிவேல் சார் காரன் நிறுத்தினார். நான் அப்படியே இறங்கி அங்கிருந்து நடக்க ஆரம்பிச்சுட்டேன். சினிமாவை விட்டு ரொம்ப தூரம் நடந்து போயிட்டேன். அன்னைக்கு நைட்டு அந்த மயான அமைதி என்னை தூங்கவே விடல கொன்னு எடுத்துடுச்சு.
8 ஆண்டுகள் வீணாப்போச்சு: அதன் பிறகு சுமார் ஒரு வருஷம் இனிமே படமே பண்ண கூடாது என்கிற முடிவில் சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி விட்டேன். ஆனால், சினிமா என்னை விடவில்லை. எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சும்மா சொல்றாங்க, நம்மள நம்பி இனிமேல் யாரும் படம் தருவா, நல்ல படத்து மறுபடியும் கொடுத்து விட வேண்டும் என்கிற நம்பிக்கையில் பல தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏறி இறங்கி நான் பட்ட அவமானம் எனக்கு அந்த பயத்தை கொடுத்தது.
இந்த படம் கிடைச்சும் சுமார் ஒரு வருஷம் அதை நம்பாமல் அந்த படத்துக்கு நான் கதையே எழுதல.. ஆனால் என்னை தொடர்ந்து மோட்டிவேட் பண்ணதன் விளைவாக தரமான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இந்த இறுகப்பற்று படத்தை இயக்கி உள்ளேன்.
படத்தை வந்து பாருங்க: இறுகப்பற்று நிச்சயம் உங்களை ஏமாற்றாது. நீங்களும் என்னை ஏமாற்றாமல் டிரைலரை பார்த்து விட்டு பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து ஓடவைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கண்களில் நீர் ததும்ப உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார் யுவராஜ் தயாளன்.
சமீப காலமாக, கத்தி, துப்பாக்கி சத்தம் இல்லாமல் நல்லதொரு குடும்ப படமாக இறுகப்பற்று இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து ஒரு நிலையில், நான் மீண்டும் கத்தி தூக்கணுமா இல்லை நல்ல படங்களை கொடுக்கணுமா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது என்றும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











