டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான 'இரும்புத்திரை' படம்.. ஆதார் பற்றிய கருத்தால் சர்ச்சை!
Recommended Video

சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
தகவல் திருட்டு மூலம் நடைபெறும் சைபர் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு டெக்னோ - த்ரில்லர் படமாக வெளிவந்துள்ளது 'இரும்புத்திரை'. இப்படத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் நடைபெறும் கொள்ளைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா நோக்கத்தின் முக்கிய திட்டமான ஆதார் கார்டு மீது ரசிகர்களுக்கு பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது இந்தப் படம். படத்தின் தொடக்கத்திலேயே தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் வெறும் 500 ரூபாய்க்கே பல்லாயிரக்கணக்கான ஆதார் தகவல் விற்கப்படும் நிலைமை இருக்கு" எனச் சொல்வார்.
படத்தில், சைபர் மோசடி உலகின் டானான அர்ஜூன், தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் கைரேகையை ஏமாற்றி பதிவு செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த ஆதார் விவரங்களையும் பெறுவதாக காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக சில வருடங்களாகவே குற்றம்சாட்டப்படுவது இதில் கவனிக்கத்தக்கது. ஆதார் தகவல்களில் நமது கைரேகை, கண் ரெட்டினா வரை அத்தனை ரகசியங்களும் இடம்பெற்றுள்ளன. அதை வைத்து குறிப்பிட்ட நபருக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்த முடியும்.
மக்களைக் காக்கவேண்டிய அரசாங்கமே, குற்றங்களுக்கு துணைபோகும் நிலையும் உருவாகலாம். ஆதார் தொடர்பான காட்சிகள் மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளன.
மத்திய அரசின் ஆதார் திட்டத்தை இந்தப் படம் நேரடியாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ளதால் தான் பா.ஜ.க-வினர் சென்னை திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 'மெர்சல்' படத்துக்கு ஏற்பட்டது போல இலவச விளம்பரம் இந்தப் படத்திற்கும் கிடைத்து விடும்போலத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











