ரஜினிகாந்த் குழப்பவாதியா?
இந்திய அரசியல் களம் தமிழகத்தை நோக்கி தன் கவனத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய அன்று தமிழகம் முடங்கியது. தன் நேசத்துக்குரிய தலைவன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்கள் முன்னால் லேசாகி போன மனதுடன் நகைச்சுவை கலந்து தனக்கே உரிய பாணியில் ரஜினி பேசியது அன்று மாலை தொலைக்காட்சியில் விவாத பொருளானது. நாளிதழ்களில் தலைப்பு செய்தியானது.

ஐந்தாம் நாள் முடிவில் ரசிகர்களிடம் பேசிய ரஜினி, "இங்கே சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது போர் வரும் போது களத்தில் இறங்குவோம்," என்று 67வயது நிரம்பிய ரஜினி தன் ரசிகர்களிடம் பேசியிருக்கிறார்.
"என்னை வாழவைத்த நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா?" என பேசியதில் ஆழமான அரசியல் பார்வை இருப்பதை அரசியல் விமர்கர்களால் ஆழ்ந்து கவனிக்கப்படுகிறது. ரஜினியின் பேச்சு தமிழகத்தில் விவாதப் பொருளாகி அவரவர் பார்வையில் பார்க்கப்படுகிறது. ரஜினி கன்னடத்துக்காரர். தமிழகத்தை ஆள நினைக்கலாமா? என்ற பார்வையில் கிளம்பும் விமர்சனங்கள் உணர்ச்சிவயப்பட்டதாக, இயலாமையின் வெளிப்பாடாகவே வருகிறது. குழப்பவாதி, எதையும் தெளிவாகச் சொல்ல மாட்டார் என்பது ரஜினி மீது தமிழக அரசியல் அரங்கில் கால் நூற்றாண்டு காலமாக வைக்கப்படும் நிரந்தரமான குற்றச்சாட்டு.
ரசிகர்கள் சந்திப்பில் பேசியதற்கு பின்னரும் இது தொடர்கிறது. தனி மனிதன் அரசு நிர்வாகத்தால் பாதிக்கப்படும் போது, பிறரால் அவமதிக்கப்படும் சூழலில் அவரவர் பலம், தகுதிக்கேற்ப பதிலடி இருக்கும். அதுபோன்ற நிலை, வேலை முடித்து இரவு தன் வீட்டுக்குத் திரும்பிய ரஜினியை காவ ல்துறை அவர் காருடன் அவரைக் காக்க வைத்தது.
தன் அபிமானத்துக்குரிய இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தது, போன்ற சம்பவங்களால் ரஜினிக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் பாட்ஷா விழா மேடையில் அவரை அதிமுக அரசை விமர்சிக்க வைத்தது.
மக்களிடம் ரஜினி பிரபலமாக இருந்ததால் அவர் பேசியது அனைத்து தப்பினராலும் கவனிக்கப்பட்டது. எதிர்க் கட்சியினரின் அரசியலுக்கு ரஜினியின் இந்தப் பேச்சு பயன்பட்டது. ரஜினிகாந்த் பாட்ஷா பட விழா முதல் இந்திய சிஸ்டம் பற்றி நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசியது வரையான பேச்சுகள் அனைத்தும் குழப்பம் இன்றி அவர் தெளிவாக இருப்பதையே காட்டுகிறது. அவரது பேச்சை வைத்து மீடியாக்களில் தங்களைப் பிரபலபடுத்திக் கொள்ள முயன்ற அரசியல் கட்சி தலைவர்கள்தான் குழப்பம் அடைந்தனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்களது இடம் காணாமல் போய் விடும் என பயந்தவர்கள் ரஜினி பேச்சைக் குழப்பம் என்றார்கள். கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும்; ரஜினி கன்னடன் என்றார்கள். நடிகர்கள் நாடாண்டது போதும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
இந்திய குடிமகன் வாக்குரிமை உள்ள இடத்தில் தேர்தலில் போட்டியிடலாம் என்று இந்திய ஜனநாயகம் வழங்கி உள்ள உரிமை ரஜினிக்கு மட்டும் இல்லை என்பது போன்று சிலர் உக்கிரமாக பேசியது அவரை விருட்சமாக்கியுள்ளது. வியாபாரிகள், வீணாய் போனவர்கள், படிக்காதவர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்பார்கள் முன்பு. கால் நூற்றாண்டு காலமாக தமிழக அரசியலைப் பார்த்து நொந்து நூலான ரஜினிகாந்த் என்கிற தனி மனித கோபத்தின் வெளிப்பாடுதான் இங்கே சிஸ்டம் கெட்டுக் கிடக்கிறது என பொது மேடையில் பேச வைத்துள்ளது.
இந்த டயலாக் நாம் அன்றாடம் டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் என பொது இடங்களில் ஒவ்வொரு இந்தியனும் பேசுகிற பேச்சு. அதுவே மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அந்த டயலாக்கை பேசுகிற போது அரசியல் ஆகிறது. ஆக ரஜினி குழப்பவில்லை. சிஸ்டத்தை மாற்ற அரசாங்கம் தேவை. அரசாங்கம் தான் கூறுவதை கேட்க அரசு தலைவராகதான் வரவேண்டும். அதற்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இது ரஜினிக்கு தெரியும், அதனை புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகள்தான் குழம்பி போயுள்ளனர்!
- ராமானுஜம்


Click it and Unblock the Notifications











