'சமூக விரோதிகள்'.. காலாவை வைத்து தான் சொன்னாரா ரஜினி?
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்துகள் காலா படத்தின் அடிப்படையில் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ரஜினி தெரிவித்த சமூகவிரோதிகள் கருத்து, காலா திரைப்படத்தை வைத்துத் தான் சொன்னாரோ என எண்ணத் தோன்றுகிறது.
கடந்த மாதம் 22ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ரஜினி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், போராட்டத்தில் கலவரம் வெடிக்க சமூக விரோதிகளே காரணம் என குற்றஞ்சாட்டினார்.
ரஜினியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாழ்வாதாரத்துக்காக போராட்டம் நடத்திய மக்களை எப்படி சமூக விரோதிகள் எனக் கூறலாம் என அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் ரஜினி தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ரஜினியின் காலா படத்தில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. போராட்டத்தின் முடிவில் வில்லன் நானா படேகரின் ஆட்கள் மக்களுக்குள் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்துவர். இதற்கு போலீசாரும் உறுதுணையாக செயல்படுவர்.
தற்போது படத்தை பார்த்தவர்கள், ஒருவேளை ரஜினி சொன்ன சமூக விரோதிகள் காலா படத்தின் பாதிப்பாக இருக்குமோ என கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு ரஜினி என்ன பதில் சொல்வாரோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











