மெர்சலுக்கு எதிராக பா.ஜ.க-வினரின் பாய்ச்சலுக்கு இதுவும் காரணமா?
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் 'மெர்சல்'. படம் வெளியாவதற்கு முன்பே டைட்டில் பிரச்னை, விலங்குநல வாரியத்தில் NOC பெறாத சிக்கல், சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதம் என பல தடைகளைச் சந்தித்தது.
ஒருவழியாக படம் வெளியாகி, உலகமெங்கும் ரசிகர்களின் ஆதரவோடு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. 'மெர்சல்' படம் விஜய் ரசிகர்களை வெகுவாகத் திருப்திப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.
'மெர்சல்' படம் வெளியானதும், படத்தில் விஜய் பேசிய வசனங்களின் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 'மெர்சல்' படத்திற்கு தமிழக பா.ஜ.க-வினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.

மெர்சல் சிக்கல்
படம் வெளியாவதற்கு முன்பு விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கேளிக்கை வரி 2% குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், 'மெர்சல்' படத்தின் ரிலீஸில் நிலவிவந்த பிரச்னைகளைத் தீர்க்கத்தான் அவர் முதல்வரைச் சந்தித்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

அரசியல் என்ட்ரி?
'ஆளப்போறான் தமிழன்' பாடல் மூலமாக தனது அரசியல் என்ட்ரியை விஜய் சூசகமாகச் சொல்வதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவியது. அதனாலும், அரசு திட்டமிட்டு சென்சார் பிரச்னை உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்தி படத்தை ரிலீஸாக விடாமல் தடுக்க முயற்சித்தது எனவும் கூறப்பட்டது. 'தலைவா' படத்தின் ரிலீஸின் போதும் இம்மாதிரியான சிக்கல்கள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி வசன சர்ச்சை
சிக்கல்களைச் சமாளித்து படம் வெளியானது. படத்தில் அரசியல் வசனங்கள் கொஞ்சம் தூக்கலாகவே வந்திருக்கின்றன. மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த திட்டமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை பற்றி விஜய் காரசாரமாக வசனம் பேசியிருக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடு முழுவதும் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விஜய்யின் வசனம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சிங்கப்பூர்ல மருத்துவம் இலவசம்
7% ஜி.எஸ்.டி வசூலிக்கிற சிங்கப்பூர்ல மருத்துவ வசதிகள் இலவசம். ஆனா, 28% ஜி.எஸ்.டி வாங்குற இங்கே மருத்துவத்தை இலவசமா தர முடியல' என மத்திய அரசைச் சாடியிருக்கிறார் விஜய். மேலும், நாட்டைச் சீரழிக்கிற மதுபானத்திற்கு குறைந்த வரி, அத்தியாவசியத் தேவையான மருந்துகளுக்கு அதிக வரி எனவும் ஜி.எஸ்.டி பாகுபாட்டைப் பற்றிப் பேசியிருக்கிறார் விஜய்.

பொங்கும் பா.ஜ.க -வினர்
தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க-வினர் 'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களுக்கு கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வசனங்களை நீக்காவிட்டால் படத்தை தொடர்ந்து திரையிட முடியாது எனவும் எச்சரித்து வருகின்றனர்.

மக்களைக் குழப்பும் விஜய்
மருத்துவ வசதி இலவசமாகத்தான் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை அறியாமல் அரசியல் ஆதாயத்திற்காகப் பொய்யான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார்கள் விஜய்யும் அட்லீயும் எனக் கூறி வருகிறார்கள் பா.ஜ.க-வினர். அதுபோக, டீமானிட்டைசேஷன் பற்றி வடிவேலு பேசும் வசனமும் பா.ஜ.க-வினரை சூடேற்றியுள்ளது.

கோவில் தொடர்பான வசனம்
'மெர்சல்' படத்தில் தளபதி விஜய் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும்போது, தீ விபத்து ஏற்பட்டு இரு குழந்தைகள் இறந்து போவார்கள். அருகில் மருத்துவமனை இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பதால், 'நமக்கு இப்ப தேவை கோயில் இல்ல... ஆஸ்பத்திரி' என்கிற ரீதியில் விஜய் ஒரு வசனம் பேசியிருக்கிறார். அவர் சொல்வதை மக்கள் ஆமோதித்து கோவில் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு மருத்துவமனை கட்டத் தொடங்குவார்கள்.

கோயில் வேணாம் ஆஸ்பத்திரி கட்டுவோம்
கோவில் கட்ட வேண்டாம் என விஜய் பேசியது பா.ஜ.க-வினரை வெகுவாகச் சீண்டியதால் இப்படி எதிர்க்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்க்கும், பா.ஜ.க-வினரும் இதற்கு முன்பு இத்தகைய பிரச்னைகள் வெடித்ததில்லை. இத்தனைக்கும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி விஜய்யைச் சந்தித்து ஆதரவு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இப்படி நேரடியாகப் பாய்வதற்குக் காரணம், பா.ஜ.க-வை குறிவைத்து விஜய் பேசியிருப்பதுதான் எனக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications