அன்புத்தொல்லை தாங்கல..சோஷியல் மீடியாவிலிருந்து லோகேஷ் வெளியேற இதுதான் காரணமா?
சென்னை : லோகேஷ் கனகராஜ் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேற முக்கிய காரணம் இதுதா என்று கூறப்படுகிறது.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தனக்கான பாதையை உருவாக்கி கமலுடன் பணிபுரிய வாய்ப்பை பெற்றார்.

விக்ரம்
கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை இயக்கி இந்திய அளிவில் லோகேஷ் கனகராஜ் பேசப்பட்டார். விக்ரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றதால், கமல் லோகேஷ் கனகராஜூக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்

தளபதி 67
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர் அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிது இடைவேளை
இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் கடந்த வாரம், அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்வதாகவும், அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டு விலகினார். லோகேஷ் வெளியேறியதற்கு முக்கிய காரணமே ரசிகர்கள் தானாம், அடிக்கடி யாராவது படத்தின் முதல் லுக், டீசர் மற்றும் ப்ரமோஷன் போன்றவற்றை வெளியிட சொல்லி அன்புத்தொல்லை தருவதால், அதை தவிர்க்கதான் லோகேஷ் இந்த முடிவை எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











