நாளைய தீர்ப்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. திமுகவை எம்ஜிஆர் போல் வனவாசம் அனுப்ப முடியுமா?
சென்னை: விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் இப்போதைய தங்களது மனநிலைமையை வெளிப்படுத்துவதற்கு தமிழில் வார்த்தைகள் பத்தவே பத்தாது. அந்த அளவுக்கு அவர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே சந்தித்த முதல் தேர்தலை வென்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். அதுவும் 60 வருடங்களாக தமிழ்நாட்டின் பெரிய அரசியல் சக்திகளில் ஒன்றான திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அரியணையில் ஏறுகிறார் விஜய்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்தே அனைவரது கவனமும் விஜய் மீதுதான் இருந்தது. முக்கியமாக திமுகவின் பார்வை தவெக மீதுதான் இருந்தது. விஜய் பெயரையோ, தவெக பெயரையோ திமுகவின் முதற்கட்ட தலைவர்கள் உச்சரிக்கவில்லை என்றாலும்; அவர்கள் மனதுக்குள் விஜய் அச்சம் விதைக்கத்தான் செய்திருந்தார். அதை அவர்கள் வெளியே காண்பித்துக்கொள்ளவில்லை அவ்வளவுதான். ஏனெனில் திமுக இதே மாதிரியான ஒரு நடிகரின் பிரளயத்தை 50 வருடங்களுக்கு முன்பே சந்தித்துவிட்டது. அந்த தைரியம் விஜய்யை கொஞ்சம் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வைத்துவிட்டது.

உணர்த்திய தேர்தல் முடிவுகள்: அந்த அலட்சியத்தின் அறுவடையை 108 தொகுதிகளில் எடுத்துவிட்டார் விஜய். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் அதிகாரம் தவெகவுக்கு சென்றது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவு கேட்டு; காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவை பெற்றிருக்கிறது. இந்த கட்சிகளில் காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் திமுகவின் கூட்டணியில் இந்த நொடி வரை நீடித்துக்கொண்டிருக்கின்றன. ஒருவழியாக திமுக ஆதரவு கட்சிகளின் துணையோடும், ஆளுநர் மற்றும் பாஜகவின் அரசியல் விளையாட்டுக்களையும் எதிர்த்து முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சி.ஜோசப் விஜய்.
சி.ஜோசப் விஜய் அடுத்த எம்ஜிஆர்?: மெர்சல் படம் வரை விஜய் எல்லோருக்கும் விஜய்தான். ஆனால் பாஜகவின் ஹெச்.ராஜா விஜய்யின் முழு பெயரான ஜோசப் விஜய் என்பதை மதத்துக்குள் இழுத்துவிட்டார். அந்த இழுத்தடிப்புதான் சி.ஜோசப் விஜய் எனும் முதலமைச்சரை உருவாக்கியதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. எம்ஜிஆர் எப்படி தேர்தலிலும், தமிழ்நாடு அரசியலிலும் பெரிய பூகம்பத்தை உருவாக்கினாரோ அதைவிட அதிக சேதாரத்தையே விஜய் ஏற்படுத்தியிருக்கிறார். எம்ஜிஆர் வாங்கிய வாக்கு விழுக்காட்டினை விடவும் விஜய் வாங்கிய வாக்கு விழுக்காடு அதிகம் என்பதை இங்கே சாதாரணமாக கடந்துவிட முடியாது.
வனவாசம் அனுப்புவாரா?: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் ஆகிவிட்டார். பதவி மட்டும்தான் ஏற்க வேண்டும். மற்றபடி அனைத்தும் ஓகேதான். சூழல் இப்படி இருக்க ஆளுங்கட்சி திமுகவை அடித்துவிட்டு எப்படி எம்ஜிஆர் அரியணையில் ஏறினாரோ அதே மாதிரிதான் விஜய்யும். எனவே திமுகவை எம்ஜிஆர் எப்படி பத்துக்கும் மேற்பட்ட வருடங்கள் அரசியல் வனவாசம் செய்ய வைத்தாரோ; அதேபோல் விஜய்யும் செய்வார் என்று தவெக கள தொண்டர்களும், சமூக வலைதள தொண்டர்களும் அடித்து கூறிவருகிறார்கள்.

இது சாத்தியமா?: இது சாத்தியமா என்று கேட்டால்; ஒரு நடிகரின் பிம்பம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு எம்ஜிஆர், விஜய் உதாரணமாக இருக்கிறார்கள். அதிலும் விஜய்யின் எழுச்சி என்பது யாருமே எதிர்பார்க்காதது. ஆனால் திமுகவை வனவாசம் இப்போது அனுப்புவது அவ்வளவு எளிதில்லை என்றே கருதப்படுகிறது. ஏனெனில் இப்போதைக்கு எம்ஜிஆரைவிடவும் விஜய்க்கு அதிக பிம்பம் இருந்து; அது தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டிருந்தாலும் எம்ஜிஆர் மீது இருந்த அபிமானமும், நல்ல பெயரும் முழுவதுமாக விஜய்க்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் மற்றவர்கள் இல்லை விஜய்தான். அதேபோல் முந்தைய திமுக ஆட்சியில் குறைகள் இருந்தாலும் அவர்கள் குறைகளை மட்டுமே வைத்து செல்லவில்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்களில் பயனடைந்தவர்கள் உலகம் முழுவதும் விரவியிருக்கிறார்கள்.

அடகு வைக்காமல்: எனவே திமுக கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தாமல் தொடர வேண்டும், அதை தொடர்வதற்கான நிதி ஆதாரங்களை மாநிலத்தை அடகு வைக்காமல் அடைய வேண்டும், மு.க.ஸ்டாலின் எடுத்து வைத்திருக்கும் நாகரீக அரசியல்வாதி பிம்பத்தை விஜய்யும் எடுக்க வேண்டும், தன்னை சுற்றி எழுந்திருக்கும் சில பெர்சனல் இமேஜுகளை விஜய் மாற்ற வேண்டும். முக்கியமாக மாநில உரிமைகளையும், மாநிலத்துக்குள் இருக்கும் சட்ட ஒழுங்கையும் விஜய் தன் கைகளில் இருந்து நழுவே விடவேகூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விஜய் இனிமேல் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்தே எடுத்து வைக்க வேண்டும்.
அந்த நெருக்கடி: 2006லிருந்து 2011வரையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு திமுக ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சிதான் கலைஞர் ஆட்சியில் மோசமான ஆட்சி என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. ஆனாலும் கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிப்பதற்கே அவருக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. இருந்தாலும் கட்சியை காப்பாற்றினார், ஐந்து வருடங்கள் ஆட்சியையும் நடத்தினார். முக்கியமாக மக்களுக்கு தன் சக்திக்குட்பட்டு நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார். அத்தனை வருட அரசியல் அனுபவம் உள்ளவே அதில் நெருக்கடிக்கு ஆளானார். விஜய்க்கு இது முதல்முறை. எனவே கூட்டணி கட்சிகளை அரவணைத்தல், ஒன்றிய அரசை எதிர்த்தல் என பல விஷயங்களை செய்தாக வேண்டும்.
நெருப்பாற்றில் நீந்தியவன்: முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை நீக்க வேண்டாம்; அதை செயல்படுத்த ஒரு மாதம் தாமதமானாலே மக்கள் வெறுத்துவிடுவார்கள் என்பதுதான் கள எதார்த்தம். வழக்கம்போல் திமுக மீது அடுத்த ஐந்து ஆண்டுகளில் பழி சுமத்தாமல் தன் கைகளுக்கு வந்திருக்கும் ஆட்சியை; அவர் மேடையில் முழங்கியது போல் செயல்படுத்தினால் மட்டுமே திமுகவை வனவாசம் அனுப்ப முடியும். ஏனெனில் விஜய்யின் இப்போதைய நிலைமையை பார்க்கையில் மேற்கூறிய விஷயங்களை செய்வது முற்றிலும் கடினம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசியலில் 60 வருட நடைமுறையை உடைத்த விஜய்யால் இதையும் செய்ய முடியும் என்பது விர்ச்சுவல் வாரியர்ஸின் கருத்து. ஆகமொத்தம் கலைஞர் கருணாநிதி எழுதிய, 'நெருப்பாற்றில் நீந்தியவன் நான்' என்ற வசனம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறது. அந்த விஜய் அதே திமுகவை எதிர்த்து பேரவைக்குள் செல்கிறார்.
பேரவைக்குள் திமுகவை எதிர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கண்டிப்பாக எதிர்க்கட்சி திமுகவை எதிர்த்தால் மட்டுமே திமுகவை வனவாசம் அனுப்ப முடியும். ஆனால் அதை விஜய் செய்வாரா என்பது இப்போதைக்கு கண்டிப்பாக சந்தேகமே.. ஆனால் ஒன்று நாளைய தீர்ப்பில் தனது பயணத்தை ஆர்மபித்த விஜய் இப்போது புதிய தீர்ப்பை எழுதியிருக்கிறார். அந்த தீர்ப்பின் தொடர்ச்சி திமுகவுக்கு முடிவுரை எழுத வேண்டுமென்றால் இதுவரை சினிமாவில் உழைத்ததை விடவும் 1000 மடங்கு உழைக்க வேண்டும். அவர் அப்படி உழைப்பதற்கு தயாராக இருக்கிறாரா இல்லையா என்பதற்கு காலம் காத்திருந்து பதில் சொல்லும்..


Click it and Unblock the Notifications
