நான் இன்னும் சாதிக்கவில்லை.. 200 இளையராஜா உருவாக வேண்டும்.. இளையராஜா பேச்சு!
சென்னை: சென்னை ஐஐடியில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரில், இசைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடக்கப்பட்டது. இதில் பேசிய இளையராஜா, இசை தான் என் மூச்சு, சென்னை ஐஐடியில் இருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்றார். இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் கலந்து கொண்டார்.
இந்திய இசை கலாச்சாரத்தை பாதுகாக்கும் அமைப்பின் (ஸ்பிக் மேகே) சார்பில் 9-வது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு சென்னை ஐஐடியில் தொடங்கியது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். ஒருவாரம் நடைபெற உள்ள இந்த மாநாடு வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதில், சென்னை ஐஐடியில் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தானது.
இளையராஜா பேச்சு: இதில் பேசிய இளையராஜா, இது ஒரு முக்கியமான நாள் என்னுடைய வாழ்க்கையில, ஒரு சின்ன பையன், அது நான் தான். கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக, என்னுடைய அம்மா எனக்கு 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார்கள். அப்போ இசை என்றால் என்னவென்று தெரியாது, வந்து இத்தனை நாள் ஆனபோதும், இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை. இப்படி இசையை தேடி வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நான் இன்னும் சாதிக்கவில்லை: என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுக்க ஆட்கள் இல்லை, தேடிக்கொண்டே இருந்தேன். ஒருவனுக்கு தண்ணி கொடுக்காத, தாகத்தை உண்டு பண்ணு, அப்போது தான் அவன் தண்ணியை தேடி கண்டு பிடிப்பான். எந்த வேலை செய்தாலும், அதில் கவனமா தாகத்தோடு செய்தால், அதில் சாதித்துவிடலாம். அனைவரும் நான் சாதித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்கிறார்கள். ஆனால், நான் கிராமத்தில் இருந்து எப்படி கிளப்பினேனோ அப்படியேத்தான் இருப்பதாக உணருகிறேன்.
200 இளையராஜாக்கள்: சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை. இசை என்பது என் மூச்சாகிவிட்டது. இங்கு இசையை கற்றுக்கொண்டு எட்டுத்திக்கும் என்று கலை செல்வத்தை பரப்ப வேண்டும் அப்படித்தான் இந்த ஆராய்ச்சி மையம் இருக்க வேண்டும். அதனால் தான் இந்த நாள் மிக முக்கியமான நாள் என்றேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், திரிபுரா ஆளுநர் இந்திரசேனாவுக்கும் 3டி வடிவிலான கையடக்க வீணை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











