Suriya Birthday - முதல் சம்பளத்தில் சூர்யா செய்த செயல்.. பிறந்தநாளில் நெகிழும் ரசிகர்கள்
சென்னை: Suriya (சூர்யா) நடிகர் சூர்யா இன்று 48ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவர் முதல் சம்பளத்தில் என்ன செய்தார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் விஜய்யுடன் தோன்றிய சூர்யாவை பலரும் விமர்சிக்கவே செய்தனர். நடனம் வரவில்லை, வசனம் பேச தெரியவில்லை என பலர் நேரடியாகவே கூறினர். இருப்பினும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத சூர்யா தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொள்வதில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.

மாற்றம் தந்த நந்தா: நேருக்கு நேர் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த சூர்யாவுக்கு நந்தா படம் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. பாலா இயக்கியிருந்த அந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க படமும் மெகா ஹிட்டானது. அந்த இரண்டு படங்களும்தான் சூர்யாவுக்கு ஆக்ஷன் ஹீரோ என்ற இமேஜை பெற்றுக்கொடுத்தன.
முன்னணி ஹீரோ: அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்கவும் செய்தன. இப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சூர்யாவுக்குள் மிகச்சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தன. பல படங்கள் அவரது பெயர் சொன்னாலும் சிங்கம் படம்தான் அவரை கொண்டுபோய் கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தில் நிறுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

நிஜத்திலும் ஹீரோ: திரையில் மட்டும் ஹீரோவாக நடிக்காமல் நிஜத்திலும் ஹீரோ என்பதை அகரம் ஃபவுண்டேஷன் மூலம் நிரூபித்தார். ஏழை, எளிய குழந்தைகளை படிக்க வைக்கும் உன்னதமான சேவையை இன்றுவரை அகரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய திட்டங்கள் ஏதேனும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதை எதிர்த்து காத்திரமாக குரல் கொடுக்கக்கூடியவரும் சூர்யாதான்.
ஜெய் பீம்: அவரது திரைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுவது ஜெய் பீம் திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படத்தில் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சூர்யா. அதுபோன்ற கதையில் சூர்யா நடித்ததால் பெரும் அளவு மக்களிடம் சென்று சேர்ந்தது. மேலும் சூர்யா போல் முன்னணி ஹீரோக்கள் இதுமாதிரியான கதையில் நடிக்க வேண்டும் எனவும் பலர் கூறினர்.
அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படமும் மெகா ஹிட்டாகி அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் சூர்யா.
முதல் சம்பளம்: தவிர்க்க முடியாத ஹீரோவாக சூர்யா இப்போது இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் பணியாற்றியது ஒரு கார்மெண்ட் கம்பெனியில். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமே இல்லை என்பதுதான் உண்மை. அவர் கார்மெண்ட் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தான் வாங்கிய முதல் சம்பளத்தில் தன்னுடைய தாய்க்கு ஒரு புடவையை எடுத்துக்கொடுத்திருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர்கள் இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











