தனுஷ் பட இயக்குநரை டீலில் விட்டாரா மாதவன்... ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னாடியே இப்படியா..?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார்.
ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து மாதவன் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதாக மித்ரன் ஆர் ஜவஹர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இந்தப் படத்தில் இருந்து மாதவன் விலகியதாக செய்திகள் வைரலாகி வருகின்றன.

மித்ரன் ஆர் ஜவஹர் - மாதவன் காம்போ
தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஆர் ஜவஹர். தொடர்ந்து தனுஷுடன் குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் படங்களில் பணிபுரிந்தார். கமர்சியல் மேக்கிங்கில் ரசிகர்களை கட்டிப் போடும் மித்ரன் ஜவஹர் தனது புதிய படம் குறித்து இம்மாதம் 11ம் தேதி அபிஸியலாக அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி, மாதவன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.

கதை கேட்ட மாதவன்
மித்ரன் ஆர் ஜவஹர், மாதவன் இணையும் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் கதையை கேட்ட மாதவன், அதில் திருப்தியடைந்ததாக தெரியவில்லையாம். மேலும், வேறு எதாவது கதை இருந்தால் சொல்லும்படி மித்ரன் ஆர் ஜவஹரிடம் அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியில்லை என்றால் பிரபல எழுத்தாளரின் நாவல் ஒன்றை படமாக எடுக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளாராம். இதனால் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் குழப்பத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷூட்டிங் தொடங்கும் முன்பே குழப்பம்
மாதவன் - மித்ரன் ஆர் ஜவஹர் இணையும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே கதையில் மாதவனுக்கு திருப்தி இல்லையென்பதால் இப்போது படக்குழுவே குழப்பத்தில் உள்ளதாம். ஆனாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விரைவில் இந்த குழப்பங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திருச்சிற்றம்பலம் வெற்றிக்குப் பின்னர் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ மீண்டும் இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் தனுஷுக்கு மாஸ் கம்பேக் கொடுத்தது. மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்த இந்தப் படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக சொல்லப்பட்டது.

கூட்டணி மாறுமா..?
ஆனால், மித்ரன் ஜவஹர் மாதவன் படத்தை இயக்க தயாரானார். இந்நிலையில் தான் தற்போது நடிகர் மாதவனுக்கு மித்ரன் ஜவஹர் சொன்ன கதை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை அப்படி இணைந்தாலும் இப்போதைக்கு தனுஷ் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளதால், உடனடியாக இந்தப் படம் தொடங்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











