மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை
சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
சீனு நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதில் பிரிட்டோவிற்கும் தொடர்பு இருப்பதாக அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஷியோமி நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில்(logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
விஜய்யின் உறவினரான பிரிட்டோ, விஜய்யை வைத்து எடுத்த மாஸ்டர் படம் தான் இந்த ஆண்டில் அதிக வசூலை பெற்ற முதல் படமாக இருந்து வருகிறது. பிரிட்டோ, மாஸ்டர் படத்தை தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
சினிமாக்கள் தயாரிப்பதுடன் பிரிட்டோவிற்கு சொந்தமாக ஒரு கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் உள்ளது. இவர் தற்போது ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வி தருவதற்காக மற்றொரு பள்ளிக் கூடத்தை கட்டி வருவதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்த பள்ளிக் கூடத்தை விஜய் சுற்றி பார்க்க சென்றதால், இந்த பள்ளியை விஜய் தான் கட்டி வருவதாக கூட வதந்தி பரவியது.


Click it and Unblock the Notifications











