அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடந்த ஐடி ரெய்டு நிறைவு: மூட்டை மூட்டையாக பணம், ஆவணங்கள் பறிமுதல்
Recommended Video
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை காலை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பிகில் படத்திற்கு செலவான தொகை மற்றும் வசூல் தொடர்பாக ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதனால் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜயிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

4 நாட்கள் சோதனை
நடிகர் விஜய்க்கு சொந்தமான மூன்று வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. விஜய் வீடுகளில் நடைபெற்ற சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதிரடி சோதனை
மதுரை காமராஜர் சாலை, தெப்பக்குளம் கனி தெருவில் அன்புச்செழியனின் வீட்டிலும் சோதனை நடந்தது. அன்புச்செழியன் பிகில் படத்திற்காக ஏஜிஎஸ் குழுமத்திற்கு 100 கோடிக்கு மேல் பணம் வட்டிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. மதுரை கீரைத்துறையில் உள்ள இவரது தாயார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அன்புசெழியனின் திரைப்பட அலுவலகம், வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

மூட்டை மூட்டையாக..
அதேபோல், மதுரையில் உள்ள அன்புசெழியன் நண்பர் சரவணன் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அன்புசெழியனின் மதுரை வீட்டில் 17 கோடி பணமும், சென்னையில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் பிரத்யேகமாக கட்டப்பட்ட ரகசிய அறையில் இருந்து கட்டுக்கட்டாக சாக்கு மூட்டையில் இருந்த 60 கோடி ரூபாய் ரொக்க பணம் என மொத்தம் 77 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சொத்து ஆவணங்கள்
இந்த பணத்தை 10 பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியம் வரை எண்ணினர். பின்னர் மதுரை மற்றும் சென்னையில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத 77 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து 300 கோடி வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்றுடன் நிறைவு
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் 3 வாகனங்களில் ஏற்றப்பட்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இந்த சோதனை இன்று அதிகாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. கணக்கில் வராத பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பாக அன்புச்செழியனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட்டு வருமான வரித்துறை விசாரணையை தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











