நயன்தாராவைப் பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு.. அதுவும் நல்லதுக்குதான்! - பிரபு தேவா
மும்பை: நான் நயன்தாராவைப் பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு.. நடந்த எல்லாமே நல்லதுக்குதான், என்றார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா.
காதலித்து மணந்த மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்துவிட்டு, நயன்தாராவை திருமணம் செய்யவிருந்தார் பிரபுதேவா. ஆனால் எதிர்ப்பாராத விதமாக, இருவரும் நிரந்தரமாகப் பிரிவதாக அறிவித்துவிட்டனர்.
பிரபு தேவா கிட்டத்தட்ட மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். நயன்தாரா மீண்டும் தமிழில் பிஸியாகி, அடுத்த காதலிலும் தீவிரமாகிவிட்டார்.
இந்தப் பிரிவுக்கு காரணம், பிரபுதேவா தன்னிடம் உண்மையாக இல்லை என நயன்தாரா முன்பு பேட்டியளித்திருந்தார்.
நீண்ட நாட்கள் கழித்து பிரபு தேவா இதுபற்றிப் பேசியுள்ளார்.

கடவுள் எடுத்த முடிவு
நயன்தாராவைப் பிரிந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் பிரிந்தது கடவுள் எடுத்த முடிவு. நாம் நினைத்த காரியம் நடந்து விட்டால் சந்தோஷப்படுவோம். நடக்காமல் போனால் கடவுள் முடிவு என்று அவரிடம் விட்டு விடுவோம். என்னைப் பொறுத்தவரை இது கடவுள் எடுத்த முடிவு. காரணம் கடவுளை நான் நம்புகிறேன். நடந்தவை எல்லாம் சரிதான். அதைப் பற்றி மீண்டும் நினைப்பதில் அர்த்தம் இல்லை," என்று கூறியுள்ளார்.

ரம்லத்தைப் பிரிந்தது ஏன்?
ரம்லத்தைப் பிரிந்தது குறித்த கேள்விக்கு, 'அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.
முதல் மனைவி ரம்லத்துடனான தொடர்பு குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத பிரபுதேவா, "என் இரு மகன்களையும் அடிக்கடி சந்திக்கிறேன். சூட்டிங் இல்லாதபோது மும்பைக்கு அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்கிறேன். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனேன்," என்று கூறியுள்ளார்.

மகன் மரணம் காரணமா?
ரம்லத்தை விவாகரத்து செய்ததற்கு மகன் மரணம் காரணமா என்று கேட்டதற்கு, "என் மகன் மரணம் அடைந்தது கோரமான இழப்பு. வேறு விஷயங்கள் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. பொதுவாக என் தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் பகிர்ந்து கொள்வதில்லை," என்று கூறியுள்ளார்.

மீண்டும் திருமணம்?
"என்னை சந்திப்பவர்களெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என் மீதுள்ள அக்கறையில் கேட்பதாகவே உணர்கிறேன். இப்போது என் சிந்தனை தொழிலில்தான் உள்ளது. தினமும் மணிக்கணக்கில் வேலை பார்க்க வேண்டியுள்ளது. காதல், திருமணம் மீது மரியாதை வைத்திருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











