திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே வரலட்சுமிக்கு வருங்கால கணவர் என்ன செஞ்சிருக்கார் தெரியுமா?
சென்னை: சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார். 38 வயதாகும் அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமீபத்தில்தான் அவர்களுக்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தச் சூழலில் நிக்கோலாய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. முக்கியமாக வரலட்சுமி தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

வாய்ப்புகளை தவறவிட்ட வரலட்சுமி: வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி என்றாலும் அவர் பாய்ஸ் படத்திலேயே அறிமுகமாகும் சூழல் உருவானது. ஆனால் சரத்குமார் அனுமதிக்காததால் அவரால் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. அதேபோல் காதல், சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சரத்குமாரின் அனுமதி கிடைக்காததால் அந்தப் படங்களிலும் வரலட்சுமியால் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
போதிய வாய்ப்பு இல்லை: பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடித்த தாரை தப்பட்டை படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் அவர் எதிர்பார்த்தபடி வரிசையாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் கொட்ட பொம்மாலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
நிச்சயதார்த்தம்: 38 வயதாகும் வரலட்சுமி ஆரம்பத்தில் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இந்தச் சூழலில் அவருக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்கிடையே விஷாலை வரலட்சுமி காதலித்தார் என்று தகவல்கள் பரவியது நினைவுகூரத்தக்கது.
பங்களா: இந்நிலையில் நிக்கோலாய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பங்களாக்களில் சொகுசு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன என்றும்; அதன் விலை பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்தான் ரசிகர்களை உச்சக்கட்ட ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கிடையே நிக்கோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











