யானை தந்த வழக்கு.. மோகன்லாலின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்; மீண்டும் விசாரிக்க உத்தரவு
திருவனந்தபுரம்: யானை தந்தங்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் மோகன்லாலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம் மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். பல ஆண்டுகளாக நடித்துவரும் மோகன்லாலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை
மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2012ஆம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து இரண்டு ஜோடி யானை தந்தங்கள் இருந்தன. அதனை கைப்பற்றிய வருமான வரித்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மோகன்லாலுக்காக சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம்?
இதனையடுத்து தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் தன்னிடமே தருமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டும் அவரிடம் மீண்டும் தந்தம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு
இந்நிலையில் கேரள அரசின் இந்த செயலை கண்டித்து ஏலூரை சேர்ந்த பவுலோஸ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை பெரும்பாவூர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அதில், யானை தந்தங்களை முறையான அனுமதி இல்லாமல் மோகன்லால் வீட்டில் வைத்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை
இதனை அடுத்து மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணையின்போது யானை தந்தம் வைத்திருப்பதற்கான முறையான சான்றிதழ் தன்னிடம் இருக்கிறது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மோகன்லால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கேரள உயர் நீதிமன்றத்துக்கு சென்ற மோகன்லால்
இந்த தீர்ப்பை ச்ற்றும் எதிர்பார்க்காத நடிகர் மோகன்லால் பெரும்பாவூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

மோகன்லாலின் மனு தள்ளுபடி
இந்நிலையில் மோகன்லாலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த கேரளா உயர் நீதிமன்றம்; மோகன்லால் யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் மோகன்லாலுக்கு புதிய சிக்கல் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











