பாண்டி முனி... 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் களமிறங்கும் கஸ்தூரிராஜா... அகோரியாக ஜாக்கி ஷெராப்!
கஸ்தூரிராஜா இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், பாண்டிமுனி என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கிறார்.
சென்னை: பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பை நாயகனாக்கி, கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழ்ப்படம் இயக்க இருக்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா.
நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, தமிழில் என் ராசாவின் மனசிலே, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தந்தவர். இவர் கடைசியாக, 2006 ஆம் ஆண்டு 'இது காதல் வரும் பருவம்' என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து, படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், அவர் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் 'பாண்டி முனி' என்ற படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் 'ஜாக்கி ஷெராப்' நாயகனாக நடிக்கிறார். மெகாலி, நிகிஷா படேல் என இரண்டு நாயகிகள் அறிமுகமாகின்றனர். இவர்கள் தவிர பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப்பயிற்சியையும், சிவசங்கர் நடனத்தையும் கவனித்துக் கொள்கின்றனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் கஸ்தூரிராஜா பேசியதாவது:

முனி:
இப்படத்தில் ஜாக்கி ஷெராப், முனி என்ற அகோரி வேடத்தில் நடிக்கிறார். பாண்டியம்மாள் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் மேகாலி நடிக்கிறார்.

புதியபாதை:
இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும், காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

சாமிக்கும் பேய்க்கும் சண்டை:
சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.

குரங்கணியில் படப்பிடிப்பு:
சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

ஆக்சன் காட்சிகள்:
பாதி படத்திற்குப் பின் தான் ஜாக்கியின் காட்சிகள் வருமாம். ஆனாலும், ஆக்சன் காட்சிகளில் களரி, வர்மம், யோகா என கலக்க இருக்கிறாராம். ஏற்கனவே, ஜாக்கி ஷெராப் தமிழில் ‘ஆரண்ய காண்டம்', ‘மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஷுட்டிங்:
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











