அமீர் பாவம்.. பழகுன பாவத்திற்கு இப்படியா? ஜாஃபர் சாதிக் பேட்டி!
சென்னை: போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் ஜாபர் சாதிக் வீட்டில் திங்கட்கிழமை தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அதே நேரம் இயக்குநர் அமீரின் வீடு மற்றும் அவரின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜாபர் ஷாதிக், "திங்கட்கிழமை (ஏப்ரல் 6) காலை 6 மணியளவில் தேர்தல் ஆணையம், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்று (ஏப்ரல்8) அதிகாலை 3 மணிக்கு தான் முடிந்தது. அவர்கள் தேடி வந்த எந்த பொருளும் என் வீட்டில் இல்லை. எனக்கும் அதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்வே வருமான வரித்துறையினர் என் வீட்டில் சோதனை நடத்தினர். இது தேர்தல் காலம் என்பதால் இப்போது இது பெரிதாக பேசப்படுகிறது.

எனக்கு சம்மந்தம் இல்லை : என் வீட்டில் இருந்து எந்தவிதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், சில மீடியாக்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது எனக்கும், என் குடும்பத்திற்கும் மிகவும் வேதனை அளிக்கிறது. அரசியல் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் என் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. டெல்லி போதைப்பொருள் வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அமீர் பாவம்: இந்த வழக்கில் அமீரிடமும் அவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனக்கே இந்த வழக்கில் சம்மந்தம் இல்லாத போது, அவருக்கு இந்த வழக்கில் என்ன சம்மந்தம். என்னுடன் பழகிய பாவத்திற்காக அவர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இந்த வழக்கு காரணமாக நான் தயாரிப்பு பணிகளில் இருந்து விலகி இருக்கிறேன். 'மங்கை' என்ற ஒரு படத்தை தயாரித்தேன் அது இப்போது சென்சாரில் உள்ளது. மாதத்திற்கு 15 நாட்கள் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்றுவிடுவதால், படங்களில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.ஆனால், இதோடு நான் நின்றுவிட மாட்டேன். இன்னும் பல படங்களை தயாரித்து வெளியிடுவேன். நான் எங்கும் போக மாட்டேன், இதே இடத்தில் தான் இருப்பேன்" என்று ஜாபர் ஷாதிக் பேசி உள்ளார்.
போதை பொருள் வழக்கு: 2024 ஆம் ஆண்டு டெல்லியில் 75 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அந்த கடத்ததில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக இருப்பது சினிமா தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து,ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாஃபர் சாதிக்கை போலீசார் கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போதை பொருள் கடத்தலில் அவர் மூளையாக இருந்தது தெரியவந்தது.
அமீரிடம் விசாரணை: அவர், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தைத் திரைப்படம் தயாரிப்பது, ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்தது அமலாத்துறையினர் தெரிவித்தனர். இதனால்,நடிகை ஆனந்தி நடித்த 'மங்கை' இயக்குநர் அமீர் இயக்கி நடித்த 'இறைவன் மிகப்பெரியவன்' படம் போதை பொருள் பணத்தில் தயாரிக்கப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இயக்குநர் அமீருக்கு 2024 ஆம் ஆண்டு சம்மன் அனுப்பப்பட்டு டெல்லியில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











