Thalaivar 170 - தலைவர் 170ஐ துரத்தும் ஜெய்பீம் பிரச்னை.. தயாரிப்பது ஜிகே மணி மகன்.. சிக்குவது ஞானவேலா?
சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170 படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாமக ஆதரவாளர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த ரஜினி ஜெயிலர் ஹிட்டை தக்க வைக்கும் முனைப்பில் உற்சாகத்தோடு இந்தப் படத்தில் களமிறங்கியிருகிறார்.
படத்தின் பூஜை: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். படத்தின் பூஜை நேற்று போடப்பட்டு திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் தொடங்கியது.கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் பெஸ்ட்டாக அமையும் என நம்பப்படுகிறது.
ஜெய்பீம்: ஏனெனில் படத்தை இயக்குவது ஜெய்பீம் படத்தின் இயக்குநர். அந்தப் படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கியிருந்தார் ஞானவேல். படம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தையும் இருளர் இன மக்களின் மீது திருப்பியது. தற்போது இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு: இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து ஒருநாள் மட்டுமே ஆகியிருக்கும் சூழலில் தலைவர் 170 படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் எழ ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து பாமக நிர்வாகி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில், திரைப்பட இயக்குநர் ஞானவேல் நம் சமூகத்தை சிறுமைப்படுத்தி இழிவுப்படுத்தி நம் மாவீரனை எதிர்மறையான கதாபாத்திரமாக வடிவமைத்திருந்ஹ்டார்.

இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. எனவே அவரது பங்களிப்பில் உருவாகும் எந்த திரைப்படத்தையும் நம் சமூக மக்கள் ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் புறக்கணித்து நம் எதிர்ப்பை பதிவு செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது: அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தில் திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட சாதியினரை அவமதிக்கும்வகையில் காட்சிகள் இருந்ததாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸும் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் ஞானவேலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஞானவேல் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. இதனால்தான் பாமக நிர்வாகி இப்படிப்பட்ட ஒரு பதிவை தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
லாஜிக் இருக்கா?: இந்நிலையில் இந்தப் பதிவை பார்த்த பலரும் தலைவர் 170 படத்தை தயாரிப்பது லைகா நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தமிழ்க்குமரன். அந்த தமிழ்க்குமரன் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே மணியின் மகன். மேலும் அவர் பாமகவின் இளைஞரணி தலைவராக இருந்து விலகியவர். நிலைமை இப்படி இருக்க இந்தப் படத்தை புறக்கணிப்போம் என்று எந்த லாஜிக்கில் இவர் பேசுகிறார். சொல்லப்போனால் எதற்காக ஞானவேல் இயக்கும் படத்தை தயாரிக்கிறீர்கள் என தமிழ்க்குமரனிடம்தானே கேள்வி கேட்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











