ஆஸ்கரை தொடர்ந்து மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம்.. விருது வேட்டையில் இறங்கிய சூர்யாவின் ஜெய்பீம்!
சென்னை: நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைமில் வெளியானது ஜெய்பீம் திரைப்படம்.
சமீபத்தில் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ஜெய்பீம் படக் காட்சிகள் வெளியான நிலையில், தற்போது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஜெய்பீம் தேர்வாகி உள்ளது.

சூரரைப் போற்று முதல்
நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து திரைப்படங்கள் சொதப்பி வந்த நிலையில், இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்து பல கஷ்டங்களை கடந்து கடும் உழைப்பை கொட்டி சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்தார். ஆனால், அந்த படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியாக அமேசான் பிரைமில் வெளியானது. ஆனாலும், சர்வதேச அளவில் ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிய சூரரைப் போற்று திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளையும் ஆஸ்கர் போட்டி வரை சென்றும் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் சாதனை
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படமும் அதே அமேசான் பிரைமில் தான் வெளியானது. அதே சூரரைப் போற்று போலவே திரைப்படம் பிரம்மாண்டமாக அடிதட்டு மக்களின் கண்ணீர் கதையை கூறிய விதத்தில் உலக அரங்கில் உற்று நோக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான பிரச்சனை
ஜெய்பீம் திரைப்படம் வன்னிய சமூகத்தை வில்லன்களாக சித்தரித்து விட்டதாக பாமகவினர் பெரும் பிரச்சனையை கிளப்பினர். ஆனால், கடைசி வரை நடிகர் சூர்யா துணிச்சலுடன் அந்த பிரச்சனையை எதிர்கொண்டதும் நடிகர் சூர்யாவுக்கு சினிமா துறை மற்றும் அரசியல் ரீதியான ஆதரவும் கிடைத்த நிலையில், அந்த பிரச்சனை பேச்சுவார்த்தையுடன் முடிந்தது.

ஆஸ்கர் அங்கீகாரம்
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படக் காட்சிகளை ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு கெளரவப்படுத்தி இருந்தனர். ஆஸ்கர் யூடியூப் தளத்தில் வெளியான முதல் தமிழ்ப்பட காட்சிகள் என்றால் அது சூர்யாவின் ஜெய்பீம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் சும்மா தான் எங்களிடம் இதுபோன்ற ஒரு வீடியோவை கேட்டது என்றும் இப்படி வெளியிடுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் ஞானவேல் கூறியுள்ளார்.

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில்
ஜெய்பீம் திரைப்படம் வெற்றிகரமாக 75 நாட்களை கடந்து இன்னமும் ஒடிடி தளத்தில் பேசு பொருளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆஸ்கரை தொடர்ந்து அடுத்த அங்கீகாரமாக நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ஜெய்பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளது. இதனால், அந்த படத்தை தயாரித்து நடித்த நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

ஜனவரி 23
வரும் ஜனவரி 23ம் தேதி 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதில், 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு வரும் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் இந்த விழாவில் போட்டியிடுவது தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











