ஆஸ்கர் தேர்வாளரையே பிரமிக்க வைத்த ஜெய்பீம்..எளிய மக்களின் கதை..ஓராண்டு நிறைவு
எளிய மக்களின் சட்டப்போராட்டத்தை அழகாக பதிவு செய்து அனைவரையும் கவர்ந்த ஜெய்பீம் வெளியாகி ஓராண்டு ஆகிறது.
சட்டம் நியாயம் சாமானியருக்கு அல்ல என்பதை பொய்யென நிரூபித்த நிஜ சம்பவத்தை கதையாக்கி காட்டியது ஜெய்பீம் படம்.
பலத்த எதிர்ப்புக்கிடையே வெளியான இப்படம் முதல்வர் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் நெகிழ வைத்தது.

முதலமைச்சர், ஆஸ்கர் ஹோஸ்ட் மனதை கனக்க செய்த ஜெய்பீம்
தேர்ந்த கதை அமைப்பு, காட்சி அமைப்பு, சூர்யா முதல் அனைத்து பாத்திரங்களின் அருமையான நடிப்பு ஜெய்பீம் படத்தை பார்த்தோர் நெஞ்சை கனத்துப்போக செய்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் "படத்தை பார்த்த என் மனதில் நெடுநேரம் அழுத்தமாக இருந்தது" என பதிவிட்டிருந்தார். படம் தன் மனதை கனத்துப்போக செய்தது என்று தெரிவித்திருந்தார். ஆஸ்கர் விருது ஹோஸ்ட் ஜாக்குலினே தன்னை மிகவும் கவர்ந்த படம் என தன்னுடௌய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அத்தகைய தாக்கத்தை ஜெய்பீம் படம் தமிழக மக்களிடமும் உலகளாவிய சினிமா ரசிகர்களிடமும் ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் கதையில் இருந்த உண்மைத்தன்மை தான்.

ஏன் ஜெய்பீம் மட்டும் பாராட்டப்படுகிறது?
ஏன் ஜெய்பீம் மட்டும் பாராட்டப்பட்டது ஜெய்பீம் வெறும் திரைப்படமல்ல, அது சாமானிய மக்களுக்கு நடக்கும் கொடுமையையும், நிஜ சம்பவ பின்னனி அடிப்படையில் சொன்னது. ஒரு வழக்கறிஞர் சட்டத்தின் மூலம் போராடி நியாயத்தை பெற்றுத்தரமுடியும் என்பதை நம்பிக்கையாக சொன்னது. எளிய மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் செயலை படம் தெளிவாக உணர்த்தியது. இதனால் படத்துக்கு வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தது. ஆனாலும் படம் பேசப்பட்டது. இந்தப்படத்தில் பாதிக்கப்பட்டதாக காட்டப்படும் பாத்திரங்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டிருப்பது படத்தை மேலூம் உணர்வுடன் பார்க்கும் ஆர்வத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்தியது.

பணத்தால் எதையும் வாங்கிட முடியாது என காண்பித்த படம்
உலகத்தில் எதையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியும் என எண்ணி ஜெயித்து வருபவர்கள், அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லாமல், தனது கொல்லப்பட்ட கணவனுக்காக தன் ஏழு வயது மகளுடன் சட்டப்போராட்டம் நடத்தும் பாதிக்கப்பட்ட பெண் முன் தோற்றுப்போவதை அழகாக உணர்த்திய அழுத்தமான காட்சி நம் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். டிஜிபியே இருந்தாலும் அவரிடம் உண்மையில்லாத பட்சத்தில் நியாயத்துக்காக போராடும் எளிய பெண் அவர் தரும் பண உதவியை நிராகரிக்கும்போது கூனி குறுகி நிற்பது மாநில உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரியான டிஜிபி என காட்டப்படும் காட்சி உணர்ச்சி வேகத்தை ஏற்படுத்தும்.

சூரரைப்போற்று போல் ஜெய்பீம் படமும் தேசிய விருதுகளை அள்ளுமா?
ஜெய்பீம் படத்தின் கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்துவருவது அப்படத்திற்கு கிடைத்த வெற்றி. ஜெய்பீம் படத்தின் வழக்கறிஞர் பின்னர் நீதிபதியாகி ஓய்வுப்பெற்ற சந்துருவும், மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி இன்றும் நம்மிடையே அதற்கான சாட்சியாக இருக்கின்றனர். வலுவான திரைக்கதை, காட்சி அமைப்பு, சூர்யாவின் அசத்தலான நடிப்பு பார்ப்போர் மனதில் அழுத்தத்தை உண்டு பண்ணியது. சூரரைப்போற்று படத்துக்கு 6 விருதுகள் கிடைத்தது. வரும் ஆண்டுக்கும் அவருக்கு ஜெய்பீம் அதே மரியாதையை பெற்றுத்தர வாய்ப்புண்டு.

அதிகார வர்க்கத்தின் கொடுமைகளை காட்டிய படம்
அதிகார வர்க்கம் அடக்குமுறையை கையிலெடுக்கும்போது பாதிக்கப்படும் மக்கள் மவுனமாகிவிடுகின்றனர். சட்டத்தின் துணையை நாடாத அளவுக்கு அது எட்டாக்கனியாக, வசதியுள்ளவர்கள் அணுகும் நிலையில் உள்ளது. இந்நேரத்தில் சட்டம் பயின்ற வழக்கறிஞர் இலவசமாக வழக்கை கையிலெடுத்து சாதிப்பது போன்ற நம்பிக்கையை படம் ஊட்டியது. அதே போல் ஹீரோயிசம் இல்லாமல் மக்கள் போராட்டம் மூலம் பிரச்சினை முடிவுக்கு வருவதை அழுத்தமாக சொல்லிய படம் ஜெய்பீம். இத்தகைய பெருமைக்குரிய படம் விமர்சனத்துக்கும் தப்பவில்லை. ஆனாலும் வெற்றிப்படமாக படத்தை மாற்றி அமைத்து ஆதரவளித்தார்கள் மக்கள்.

எளிய மக்களுக்கு வாய்ப்பு சரியாக கிடைத்தால் சாதிப்பார்கள்
கொரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக ஆதரவை ஓடிடி தளத்தில் பெற்ற ஜெய்பீம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. சூர்யா எனும் கலைஞனின் சமூக அக்கறையும், ஞானவேல் எனும் இயக்குநர், ஓய்வு நீதிபதி சந்துருவின் பங்களிப்பு என படத்தை உருவாக்க ஒவ்வொருவரும் கொடுத்த பங்களிப்பு தமிழில் தரமான சமூக அக்கறையுள்ள படம் வெளிகொணர்ந்த பெருமை கிடைத்தது. நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் சூர்யா-ஜோதிகாவுக்கு இது ஒரு திருப்புமுனை படம். உரிய வாய்ப்பு கிடைத்தால் கடைகோடியில் உள்ள மக்கள் கூட அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதை கடைசி காட்சியில் மணிகண்டனின் மகள் சூர்யாவுடன் அமர்ந்து பேப்பர் படிப்பதுபோன்று காட்சி வைத்திருப்பதில் காணலாம்.


Click it and Unblock the Notifications











