Amaran: யாருக்குத்தான் கோபம் வராது? அமரன் பட இயக்குநரை கண்டபடி திட்டிய நெல்சன் திலீப்குமார்
சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு பலர் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள்தான். குறிப்பாக விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து தங்களுக்கான இடத்தினை நிலை நிறுத்திக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், ஹரீஸ் கல்யாண், கவின், ரோபோ சங்கர், கேபிஒய் பாலா என பலரைக் கூறலாம். அதேபோல் இயக்குநர்கள் வரிசையிலும் நெல்சன் திலீப்குமார், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரையும் குறிப்பிடலாம். இந்த தீபாவளிக்கு கூட விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படமும், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் படம் ரிலீஸ் ஆனது. உண்மையிலேயே இந்த தீபாவளி விஜய் டிவியின் தீபாவளி எனக் கூறலாம்.
இதில் அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அமரன் படம் அதிக தியேட்டர்களிலும் வெளியானதால் படத்தின் வசூல் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் என படக்குழு தெரிவித்தது. அதேபோல், படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகின்றது. எப்படியும் படம் இந்த வார இறுதிக்குள் ரூபாய் 200 கோடிகள் வரை வசூல் செய்யும் என கூறப்படுகின்றது.

அதேபோல் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படமான ப்ளடி பெக்கர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் என்பதைவிடவும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் அது படத்தின் வசூலில் ஓரளவுக்குத்தான் கைகொடுத்துள்ளது. படம் இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தாயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான முதல் படம்.
வீடியோ: ஒரே இடத்தில் ஆளான நபர்கள் சினிமாவிலும் கோலோச்சி, எதிரெதிராக படங்களை ரிலீஸ் செய்துள்ளது என்பது விஜய் டிவியைச் சார்ந்த பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இப்படியான நிலையில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியைத் திட்டியதாக தானே கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

மணிரத்னம்: அந்த வீடியோவில், " எனக்கு ராஜ்குமார் பெரியசாமியை நீண்டகாலமாகத் தெரியும். என்னுடையை நீண்ட நாள் ஆசை, இயக்குநர் மணி ரத்னம் சாருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். ஒருமுறை மணிரத்னம் சார் விஜய் டிவிக்கு வந்திருந்தார். அப்போது நான் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். என்னையும் அவரையும் ராஜ்குமார் பெரியசாமி தான் வைத்திருந்த செல்போனில் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படத்தில் என்னைப் பார்த்தால் அவரைப்போலவும், அவரைப் பார்த்தால் என்னைப்போலவும் இருந்தோம்.
திட்டு: ஆனால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்னவென்றால், மணி சாருடன் புகைப்படம் எடுத்துவிட்டேன் என்பதுதான். நான் ரொம்பவும் சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால் புகைப்படம் எடுத்த அடுத்த நாள், செல்போனைத் தொலைத்துவிட்டார். இதற்காக நான் அவரை கண்டபடி திட்டினேன். இன்னும் சொல்லப்போனால், போன மாதம் வரை திட்டினேன்" எனக் கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











