Jailer - வெறும் 9 பேர்தான்.. என்னடா இது ஜெயிலருக்கு வந்த சோதனை
சேலம்: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படம் பார்க்க வெறும் 9 பேர் மட்டுமே வந்ததால் படத்தை திரையிட முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு இந்தப் படம் மெகா ஹிட்டானது. இதனால் அவர் உற்சாகத்தில் இருக்கிறார்.

வசூல் சாதனை: விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு மெகா ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதுவரை படம் 700 கோடி ரூபாய்வரை உலக அளவில் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் வசூலை ஜெயிலர் தட்டி தூக்கியிருப்பதாக ரஜினியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
பரிசு: ஜெயிலர் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் ஆகியோருக்கு கார்களையும், செக்குகளையும் பரிசாக கொடுத்தார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன். மேலும் மீண்டும் சன் பிக்சர்ஸ் - நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
தங்க நாணயம்: ஹீரோ, இயக்குநர், இசையமைப்பாளருக்கு பரிசு கொடுத்த கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலாநிதி மாறன், நெல்சன் திலீப்குமார், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
9 பேர்தான்: இந்நிலையில் படம் வெளியாகி கடந்த வாரம்வரை சில திரையரங்குகளில் கூட்டம் வந்துகொண்டிருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறிவந்தனர். சூழல் இப்படி இருக்க சேலம் ஏ.ஆர்.ஆர். மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரின் 25ஆவது திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
அதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார். ஆனால் திரையரங்கு சென்றபோது அங்கு மொத்தமே 9 பேர்தான் படம் பார்க்க வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெயிலர் படம் திரையிடப்படாது என தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை திருப்பி செலுத்திவிடுவோம் என திரையரங்கத்தினர் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











