கேன்சரில் இருந்து மீண்ட ஜெயிலர் நாயகன் சிவ ராஜ்குமார்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரத்தி எடுத்து வரவேற்பு
பெங்களூரு: கர்நாடக சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். அவருக்கு கேன்சர் என்றதும் ரசிகர்கள் பதறிப் போனார்கள். மேலும் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கிளம்புவதற்கு முன்னால் ரசிகர்களுக்கு செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்து எமோஷனலாக பேசினார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள் மேலும் எமோஷனலாகி சமூக வலைதளங்களில் அவர் புற்றுநோயில் இருந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சையில் இருந்த சிவ ராஜ்குமார் சிகிச்சை முடிந்து இந்தியாவுக்குத் திரும்பினார். சிவராஜ்குமார் புற்றுநோயில் இருந்து மீண்டு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி மற்றவர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் அவருக்கு இருந்தது. இதனால் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். ஜெயிலர் 2 படத்தில் இவர் நடிக்க இவரிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் சிவ ராஜ்குமார் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என கூறப்படுகிறது.

ஜெயிலர் 2: தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் போல கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிவராஜ்குமார். ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து மொத்த அப்ளாஸ்களையும் அள்ளிச் சென்றார். சிவ ராஜ்குமார் கடைசியாக தமிழில் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்ததால், சோலோவாக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார். அந்த படத்தில் ஈட்டி படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை முடிந்து கமிட் ஆனார். இறுதியில் அவருக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால், அந்த படத்தில் இருந்து விலகினார்.
பிரார்த்தனை: சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய சிவ ராஜ்குமார் ஓய்வில் இருந்தார். புற்றுநோயில் இருந்து மீண்டு விட்டதால், தான் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். முதலில் நடிக்க மறுத்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது மட்டும் இல்லாமல், இந்தப் படத்தில் நடிக்க சுமார் 15 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அதில் அவருக்கான சிங்கிள் ஷாட்களை எல்லாம் படக்குழு எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளது.
ஆரத்தி: இப்படியான நிலையில் சிவ ராஜ்குமார் தனது 131 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு படக்குழுவினர் ஆரத்தி எடுத்து, திருஷ்டி சுற்றி வரவேற்பு அளித்தார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவரது நடிப்பில் உருவாகவுள்ள படம் ஜெயிலர் 2. ஏற்கனவே ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் ஹிட் படமாக மாறியதால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் நடிக்க 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சிவ ராஜ்குமார்.


Click it and Unblock the Notifications











